
கோவையை அடுத்த ஆலாந்துறை பூலுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரூபிணி(வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் ஆலாந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ரூபிணியை 4 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்திச் சென்றதாகவும், பின்னர் மொட்டை அடித்து கை, கால்களை கட்டி பேரூர் படித்துறை அருகே புதருக்குள் வீசிவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பேரூர் போலீசார் ரூபிணியை மீட்டனர். அவர் அருகே நின்ற வாலிபரையும் பிடித்தனர்.அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர். எனவே அவர்கள் இருவரையும் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
மகளிர் போலீசார் ரூபிணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது ’நான் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பும் போ 4 பேர் வேனில் என்னை கடத்தி சென்றனர்
பேரூர் சென்றதும் எனக்கு மொட்டை போட்டனர். பின்னர் அங்குள்ள புதருக்குள் வீசி விட்டுச் சென்றனர்’ என கூறினார்
.
ரூபிணி கூறுவதில் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்ட போலீசார் பின்னர் அவர் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரிடம் தனியே விசாரித்தனர். அப்போது ரூபிணி கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
அந்த வாலிபர் கூறும் போது நான் பேரூர் படித்துறை அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது இந்த பெண் (ரூபிணி) என்னிடம் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தார்.
பின்னர் அந்த பகுதியில் காயின் பாக்ஸ் போன் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான் ஒரு போன் நம்பருக்கு டயல் செய்வேன். போனை எடுத்ததும் ’உங்கள் மகளை கடத்திய கும்பல் அவருக்கு மொட்டை அடித்து பேரூர் படித்துறை அருகே வீசி விட்டுச் சென்றனர்’ என்று சொல்லுமாறு கூறினார். நானும் அப்படியே கூறினேன் என்றார்.
ரூபிணி ஏன் இப்படி சொல்லச் சொன்னார்? என்று மறுபடியும் போலீசார் அவரிடம் விசாரித்த போது அவரின் காதல் நாடகம் அம்பலமானது.
ரூபிணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது. இந்த விவரம் ரூபிணியின் பெற்றோருக்கு தெரியவரவே அவரை கண்டித்து உள்ளனர்.இந்த தகவல் ரூபிணியின் காதலனுக்கு தெரிய வரவே ’நமக்கு ஏன் இந்த வம்பு’ என்று ரூபிணியை சந்திப்பதையே தவிர்த்து விட்டார். இதனால் ரூபிணி அவரை தேடிச் சென்றிருக்கிறார்.
இந்த தகவல் ரூபிணி பெற்றோருக்கு தெரியவரவே மீண்டும் கண்டித்திருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த ரூபிணி காதலனின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவே இந்த கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. எனவே போலீசார் மாணவியின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் ’இனிமேல் இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன்’ என்று மாணவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் அனுப்பி விட்டனர்.
No comments :