
என் வயது, 20; பொறியியல் இறுதி ஆண்டு படிக்கிறேன். என் சகோதரி மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். என் பெற்றோர் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்ததை, என், 16வது வயது வரை நான் பார்த்தது இல்லை. எப்போதும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். என் தாயின் அம்மா வீட்டில் தான், வெகுநாட்கள் வாழ்ந்தோம். நான் பிளஸ் 2 படிக்கும் போது தாத்தா, பாட்டி (அம்மாவின் அப்பா, அம்மா) மறைந்தனர். அதன் பிறகே என் பெற்றோர் ஓரிடத்தில் இருப்பதை பார்க்கிறேன்.
என் பெற்றோரின் சண்டைக்கு காரணம், என் தாயின் பேச்சை கேட்காமல், தந்தை தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்தார். என் தந்தை அதிகமாக கோபப்படுவார். அத்துடன், மனநிலை சரியில்லாதவர்.
இதனால், சிறு வயதில், தந்தையின் மீது கோபப்பட்டாலும், என் கல்லூரி நாட்களில் அவரை புரிந்து கொண்டேன். தந்தையிடம் கோபமாக பேசினாலும், மனத்திற்குள் நேசிப்பேன். இப்பொழுது என் கவலையே எங்க அம்மாவை நினைத்துத் தான். அம்மா தனியார் நிறுவனம் ஒன்றில், அதிகாரியாக இருக்கிறார். அவரை நாங்கள் ஏமாற்றி விடுவோமோ என்ற எண்ணத்தில், எதற்கெடுத்தாலும் எங்களை சந்தேகப்படுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, எதற்கெடுத்தாலும் அம்மா திட்டுகிறார். தன்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவருடன், எந்நேரமும் மொபைலில் பேசுவது, எம்.எம்.எஸ்., அனுப்பவது என்று இருக்காங்க. முன்பெல்லாம், எங்க வீட்ல ஏதாவது பிரச்னை என்றால், அம்மா, அவங்க அண்ணனிடம் தான் சொல்வாங்க. ஆனால், இப்ப தன்னுடன் பணிபுரியும் அந்த நண்பரிடமே கூறுகிறார். அந்த நண்பரிடம் நானும், என் சகோதரியும் சரியாக பேசவில்லையென்றால், உடனே, எங்களை பயங்கரமாக திட்டி அடிப்பார். அதேநேரம், அந்த நண்பருடன் ஏதாவது விளையாட்டுத்தனமாக பேசினாலும் திட்டுகிறார். எப்போதும், அவரிடம் நாங்கள், அம்மாவை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பதுடன், அவர் கூறும் விதத்தில் தான் பேச வேண்டும் என்கிறார்.
நாங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்வதே பெரிய அதிசயம். அதுவும், இவர் எங்கள் வீட்டிற்கு வரப் போகிறார் என்றால், அதுவும் கிடையாது. எங்காவது சென்றாலும் உடனே வந்து விட வேண்டும். அவர், என் அம்மாவிடம் மற்ற அலுவலர்களிடம் பேசுவது போல் தான் பேசுகிறார். ஆனால், எங்க அம்மா தான், அவர் ஒரு நாள் வரலன்னாலும், பேசலன்னாலும் என்னையும், என் சகோதரியையும் திட்டிக்கிட்டே இருப்பாங்க.
பாவம், என் தந்தை; இதை அவரிடம் தெளிவாக கூற முடியாது. அவரோ மனநிலை சரியில்லாதவர். என் உறவினரிடம் ஏதாவது கூறினால், அவர்கள் எல்லாரும் என் தந்தை சிறுவயதில் எங்களை படுத்திய கஷ்டத்தை கூறி, என் அம்மாவிற்கு தான் பரிந்து பேசுகின்றனர்.
அம்மா... எங்கள் அம்மாவை நாங்கள் தவறாக சந்தேகப்படுகிறோம் என நினைக்காதீர்கள். ஒருமுறை, என் அம்மாவின் மற்றொரு நண்பர் வீட்டு திருமணத்திற்கு என்னையும், என் சகோதரியையும் கட்டாயப்படுத்தி அனுப்பினார். என் தந்தையை, அவர் சகோதரி வீட்டிற்கு அனுப்பி விட்டு, 'எனக்கு முடியல; 'ரெஸ்ட்' எடுக்கப் போறேன்...' என்று சொல்லி, அந்த நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். மேலும், 'என்னை விட உங்கள் மேல் அதிகம் பாசம் வைக்க, இந்த உலகில் யாரும் இல்லை...' என்று அந்த நண்பருக்கு, 'மெசேஜ்' அனுப்பி உள்ளாள் அம்மா. இதற்கு என்ன அர்த்தம்... நாங்க பார்த்து விடுவோம் என்று, 'மெசேஜ்' அனுப்பியதும், அதை, 'டெலிட்' செய்துடுறாங்க. அன்று, அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்ததை அவரே எங்களிடம் சொல்லி விட்டார். ஆனால், இதுவரை அம்மா சொல்லவே இல்லை.
எங்க வயசு பொண்ணுங்க எப்படியெல்லாமோ சந்தோஷமா இருக்காங்க. நாங்க ரெண்டு பேரும், இப்பவும், இவங்களுக்கு பயந்து தான் இருக்கோம். நாங்க மொபைல் மற்றும் நெட் பயன்படுத்தக் கூடாது; ஆனால், அவர்கள் செய்தால் தப்பில்லை. ஏனென்றால், இந்த காலத்து பிள்ளைங்கள நம்ப முடியாதாம்.
அம்மா... நானும், என் தங்கையும் அந்த அளவிற்கு விவரம் இல்லாமல், யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் ஏமாந்து போக மாட்டோம். காரணம், எங்களது சிறுவயதிலும் சரி, இப்பொழுதும் சரி நாங்கள் எங்கள் வயதிற்கேற்ற ஆசைகள், பாசம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தான் வாழ்கிறோம்.
சிறுவயதில், தந்தை சரியில்லை என்று அனைவரும் திட்டினர். தற்போது தாயே எங்களை எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுறாங்க. நான் படித்து முடித்து வேலைக்கு சென்றாவது என் தங்கை மற்றும் தந்தைக்கு ஆறுதலாக இருக்கலாம் என நினைத்தால், என் அம்மாவிற்கு, நான் வேலைக்கு சேர்ந்தால், அவர் நிறுவனத்தில் தான் சேர வேண்டுமாம். இல்லையென்றால், அவரது நண்பர் கை காட்டும் நிறுவனத்தில் தான் சேர வேண்டுமாம். காரணம், அவர்களது கட்டுப்பாட்டுக்குள் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறங்க. நாங்கள் நிறைய விஷயங்களை பார்த்தும், பார்க்காதது மாதிரி செல்கிறோம்.
அம்மா... நானும், என் சகோதரியும் நிறைய விஷயங்களை சொல்ல முடியாமல் மனதினுள் வைத்து கஷ்டப்படுகிறோம். நாங்கள் என்று சுதந்திர பறவையாக மாறுவது? என் தங்கை தான் ரொம்ப பாவம். அம்மாவின் நண்பரிடம் பேசினாலும், பேசாவிட்டாலும் அவளை என் அம்மா ரொம்பவே காயப்படுத்துகிறார். எங்களுக்கு ஒரு வேலை கிடைத்தாலாவது நாங்கள் எங்க சொந்த காலிலில் நிற்கலாம். ஆனால், அதற்கு எப்படி என் தாயை மீறி போவது, யாரிடம் உதவி நாடுவது என தெரியவில்லை. எங்களுக்கு யாராவது உதவி செய்வதாகப் பேசினால், அவர்களை மொபைலில் கூப்பிட்டு திட்டிடுறாங்க அம்மா. அதனால், அவர்கள் யாரும் எங்களிடம் பேசுவதே இல்லை. எங்கள் மனநிலைக்கு நீங்களாவது கொஞ்சம் ஆறுதல் தாங்க அம்மா.
— இப்படிக்கு,
வழி தெரியாமல் வாழத் துடிக்கும் பெண்கள்.
அன்பு மகளுக்கு,
ஒரு கொடியில் பூத்த இருமலர்களின் கடிதத்தை பல முறை வாசித்தேன். 20 வயது, 18 வயது இளங்குருத்துகளின் அபிலாஷைகள், பெற்றோரின் துர்நடத்தையால் எப்படி கருக்கப்பட்டுள்ளன என்பதையும் உணர்ந்தேன்.
'மனநிலை சரியில்லாத ஆளை கட்டி என்ன சுகத்தை கண்டேன்...' என்கிற சுயபச்சாதாபத்தாலே, உங்கள் தாய் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடுகிறாள். அந்த ஆணை, உங்களின் தாய் தான் விரட்டி விரட்டி காதலிக்கிறாள் என்பது தெரிகிறது. மகளே... கள்ள உறவில் ஈடுபடுவோர் இரு விதம். ஒன்று, தங்களது கள்ளக் காதலை உறவு, நட்பிடமிருந்து மறைப்பர். இன்னொன்று, தங்களது கள்ளக் காதலில் உறவு, நட்பை வலுக்கட்டாயமாக பங்கு பெற வைப்பர்.
என் உறவுக்கார பெண், ஒரு சிவில் இன்ஜினியரிடம் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள். தன் சொந்த பந்தத்தில் யாருக்காவது வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த இன்ஜினியரிடம் இலவச ஆலோசனை செய்ய வைப்பாள். மேலும், அவரின் காரில், உறவினர்களுக்கு ஓசி பயணமும் உண்டு. உறவினரின் நல்லது, கெட்டதுகளுக்கு இன்ஜினியரை அழைக்கச் சொல்வாள். அப்படித்தான் உங்கள் அம்மா, உங்களிருவரையும் தன் கள்ளக் காதலரிடம் அவளைப் பற்றி பேசச் சொல்கிறாள். அதே சமயம், அதிகமாக பேசினால் கள்ளக் காதலர் உங்களில் யார் மீதாவது ஈர்க்கப்பட்டு விடுவாரோ என்கிற பயத்தால், கூடுதலாய் பேசுவதை தடுக்கிறாள்.
'தான் திருடி பிறரை நம்பாள்' என்கிற பழமொழிக்கேற்ப, நீங்களிருவரும் கைபேசி உபயோகிக்க கூடாது; இணையதளம் பார்க்கக் கூடாது என, தடை போடுகிறாள். அதற்கு காரணம், 'நாம் தான் சூழ்நிலைக் கைதியாய் கள்ளக் காதலில் ஈடுபடுகிறோம்; நம் மகள்களாவது தவறான விஷயங்களிலிருந்து தள்ளி நிற்கட்டுமே...' என்கிற தாயன்பு கூட, உன் தாயின் செயலுக்கு காரணமாய் இருக்கலாம்.
உன் தாயின் தரப்பிலும் சில, பல நியாயங்கள் இருக்கக்கூடும் செல்லம்... அவற்றை நாம் முற்றிலும் உதாசீனப்படுத்த முடியாது.
நீங்களிருவரும் படித்து முடித்து வேலைக்கு போன பின்னும், தான் மற்றும், தன் ஆண் நண்பரின் கட்டுப்பாட்டில் தான் நீங்கள் இருக்க வேண்டும் என, உன் தாய் பிடிவாதம் பிடிப்பது, பக்குவமற்ற செயல்.
உங்களின் தாயின் ஆண் நண்பர், ஒரு இரண்டாங் கெட்டானாக தெரிகிறார். அவருக்கும் திருமணமாகி, உங்களிருவரின் வயதுகளில் மகனோ அல்லது மகளோ இருப்பர். இந்த உறவு தற்காலிகம். உங்களது தந்தையை மனநிலை சரியில்லாதவர் என நிரூபித்து, விவாகரத்து பெற்று, ஆண் நண்பரும், அவரது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று, இருவரும் மறுமணம் செய்து கொள்வது குதிரை முட்டை போடுவதற்கு சமம். அணைவதற்குள் தீபம் பிரகாசமாய் எரியும் என்பர். உங்களின் தாய், 45 வயதை நெருங்குபவராய் இருப்பார். வெகுசீக்கிரம் மெனோபாஸ் பீரியடு வந்து விடும். அப்போது, உங்கள் தாயின் காம உணர்ச்சிகள் தணிந்து விடும். காம தகனத்தை விட உற்றதொரு பேச்சு துணைக்காக, உங்களின் தாய் அந்த ஆண் நண்பரை தேடியிருந்தால், அந்த உறவு, மறுமணம் தேவைப்படாமல், ஆயுளுக்கும் தொடரலாம்.
நீங்களிருவரும் இப்போதே சுதந்திரப் பறவைகள் தான். 18 வயது நிரம்பிய மேஜர்கள். இருந்தாலும், தாயின் துர்நடத்தையை கண்டும், காணாமலும் படிப்பை தொடருங்கள். முதலில், உன் பொறியியல் படிப்பு முடிந்ததும், உனக்கு பிடித்த வேலைக்கு போ. மனநிலை சரியில்லாத தந்தையை உடன் அழைத்து, அவருக்கு தேவையான மருத்துவம் பார். உன் தந்தை வழி மூத்தவர்களுடன் பேசி, கலந்துரையாடி தகுந்த ஆலோசனைகள் பெறு.
மருத்துவ படிப்பு முடிக்கும் வரை, தாயுடன் ஒத்துழைப்பது போல உன் தங்கையை நடிக்கச் சொல். எம்.பி.பி.எஸ்., படித்தவுடன் எம்.டி., படிக்க நுழைவு தேர்வுகள் எழுதச் சொல். மேற்படிப்பு படிக்கும் வசதியோ, ஆர்வமோ இல்லாவிட்டால், பொது மருத்துவம் பார்க்கும் கிளினிக் வைக்கச் சொல். அவள் அதிக செலவில்லாத பி.டி., டிப்ளமோ கோர்ஸ் படிக்கலாம்.
நீங்களிருவரும் பிடித்த வேலைக்கு செல்வதையும், பிடித்த நபரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும், உங்களின் தாய்க்கு சட்டப்படி உரிமை இல்லை. துணையை தேடுவதில் மகா கவனமாய் இருங்கள்.
இரு சுதந்திர பறவைகளும், ஏழாம் வானம் வரை சிறகடித்து பறக்க வாழ்த்துகள்.
No comments :