பிரதமர் மோடியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மோடி மறுப்பு



புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு கெஜ்ரிவால் விடுத்த அழைப்பை மோடி நிராகரித்தார்.
மோடி வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் ‘ஆம் ஆத்மி‘ கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நாளை முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியை மேம்படுத்த கெஜ்ரிவாலுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதி அளித்தார்.
சந்திப்பு
இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காலை சந்தித்தார். அவருடன், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவும் சென்றிருந்தார்.
பிரதமருக்கு கெஜ்ரிவால் பூங்கொத்து கொடுத்தார்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய சந்திப்பு, 20 நிமிட நேரம் நீடித்தது.
மோடி நிராகரித்தார்
இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து மணீஷ் சிசோடியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
டெல்லி ராம்லீலா மைதானத்தில் 14–ந் தேதி நடைபெறும் தனது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். ஆனால், அதே நாளில், மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி, விழாவுக்கு வர இயலாது என்று பிரதமர் மோடி கூறினார்.
டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலிப்பதாக மோடி உறுதி அளித்தார்.
இணைந்து செயல்படுவோம்
பிரதமர் மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, ‘மத்திய அரசுக்கும் முழு மெஜாரிட்டி இருக்கிறது. டெல்லி அரசுக்கும் முழு மெஜாரிட்டி இருக்கிறது. எனவே, டெல்லியை சிறப்பான நகரம் ஆக்குவதற்கு இணைந்து செயல்பட இதுவே தங்கமான வாய்ப்பு‘ என்று தெரிவித்தார்.
இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் பங்கேற்க இயலாததற்கு பாதுகாப்பு பிரச்சினையும் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி
அரவிந்த் கெஜ்ரிவால், நேற்றுமுன்தினம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
மேலும், மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top