
சுனையில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஊராட்சிக்குட்பட்ட ஏ.உடையார்பட்டியை சேர்ந்த ரவி மகள் சந்தியா(13), துரைசாமி மகள் வனிதா(13), மூர்த்தி மகள் சரோஜினிதேவி (13), மாணிக்கம் மகள் பாண்டிமீனா (13. இவர்கள் 4 பேரும் கழுகூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த மாணவிகள் 4 பேருடன் அதே பள்ளியில் படிக்கும் மேலும் 4 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 9 பேரும் கழுகூரை அடுத்துள்ள மாரிபாறைபட்டியில் மலை மேல் உள்ள உள்ள சுயம்பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட 5 சைக்கிளில் நேற்று மதியம் சென்றுள்ளனர்.
மலைஅடிவாரத்தில் சைக்கிள்களை நிறுத்தி விட்டு மலையில் ஏறிய 9 பேரும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அங்கேயே அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். பின்னர் கீழே உள்ள சுனையில் தண்ணீர் குடிப்பதற்காக 9 பேரும் கீழே இறங்கி வந்துள்ளனர்.
இவர்களில் சந்தியா, வனிதா, சரோஜினிதேவி, பாண்டிமீனா ஆகிய 4 பேரும் தண்ணீர் குடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி மட்டும் தண்ணீரில் தவறி விழுந்துள்ளார்.அருகில் நின்ற மற்ற சிறுமிகள் அவரை காப்பாற்றுவதற்காக கையை பிடித்து இழுத்த போது அவர்களும் தண்ணீரில் விழுந்தனர். தொடர்ந்து 4 சிறுமிகளும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.
இதை பார்த்த மற்ற 5 பேரும் மலைமேல் உள்ள கோவிலுக்கு ஓடி சென்று காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளனர். அப்போது அங்கு நின்றவர்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்களும் அங்கு ஓடி வந்தனர். பின்னர் சுனையில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினார்கள். அப்போது 4 சிறுமிகளும் பலியானது தெரிய வந்தது. இதையடுத்து 4 சிறுமிகளின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலியான சிறுமிகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மேலும் அந்த இடத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த கலெக்டர் ஜெயந்தி, எஸ்.பி. ஜோசிநிர்மல்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி அருணா,பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ.,டி.எஸ்.பி.ஜமீம், உள்பட பலர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதை தொடர்ந்து குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு 4 சிறுமிகளின் உடல்களும் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
No comments :