
மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி நின்று நடனமாடியபடி ஊர்வலமாக வந்து கலக்கினார்கள்.
சென்னையில் மாணவர்கள் பஸ் தினவிழா கொண்டாட கோர்ட்டு தடை விதித்து உள்ளது. போலீசாரும் தடை விதித்து உள்ளனர். ஆனால் மாணவர்கள் தடையை மீறி பஸ்தின விழாவை கொண்டாடி அவ்வப்போது கலக்கி வந்தனர். நேற்று பகலில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 30 பேர் 15- பி மாநகர பஸ்சில் பஸ் தினவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்ப்பாக்கத்தில் வைத்து அந்த பஸ்சில் ஏறிய மாணவர்கள் ஆட்டம்-பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று சில மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி நின்று நடனம் ஆடியபடி வந்தனர். மாணவர்கள் சத்தம் போட்டபடியும், விசில் அடித்தபடியும் ஆடி-பாடி வந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தாண்டி மாணவர்களின் ஊர்வல பஸ் சென்ற போதுதான், போலீசார் அதை கவனத்தில் கொண்டனர். உடனே ரோந்து போலீசார் மாணவர்கள் ஆட்டம் போட்டு சென்ற பஸ்சை விரட்டிச் சென்று மடக்கினார்கள். ரோந்து போலீசாரால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியன் போலீஸ் படையுடன் விரைந்து வந்தார்.
பெரியமேட்டில் வைத்து மாணவர்கள் ஊர்வலமாக சென்ற பஸ்சை மடக்கினார். போலீசை பார்த்ததும் ஆட்டம் போட்ட மாணவர்கள் பஸ்சை விட்டு இறங்கி ஓடினார்கள். இறங்கி ஓடிய மாணவர்கள், எங்களுக்கு இன்றோடு வகுப்பு முடிந்து விட்டது, இனி பரீட்சை எழுதத்தான் வரவேண்டும். வகுப்புக்கு கடைசி நாள் என்பதால், சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் இவ்வாறு நடந்துகொண்டோம், என்று கூறி விட்டு மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசாரும் வேறு வழிஇல்லாமல், மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்கள் மீது வழக்கு எதுவும் நேற்று மாலை வரை போடவில்லை.
No comments :