மும்பையில், பணி அறிக்கையை கேட்ட காவல் ஆய்வாளரை, உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

புறநகர் பகுதியில் உள்ள வகோலா காவல்நிலையத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய திலிப் ஷிர்கே, தம்மிடம் இருந்த கைத் துப்பாக்கியால், காவல் ஆய்வாளர் விலாஸ் ஜோஷியின் முதுகில் திடீரென இரண்டு முறை சுட்டார்.
இதில் பாதுகாவலர் ஒருவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பின்பு அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றைய பணி அறிக்கையை ஷிர்கே அளிக்கவில்லை என்றும், இதை கேட்டபொழுது காவல் ஆய்வாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த திலிப் ஷிர்கே, ஜோஷியை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற காவல்நிலையத்திற்கு சென்று, மும்பை மாநகர காவல் ஆணையர் ராகேஷ் மரியா விசாரணை நடத்தினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜோஷியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments :