அரசுப்பணிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 10 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

அரசுப்பணிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 10 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
சென்னை,ஜன.31-

இந்த ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பல்வேறு பணிகளுக்கு 10 ஆயிரம் பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் ஊழியர்கள் ஆகியோரை தேர்ந்து எடுக்க நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு எந்த தேதியில் வெளிவரும், எந்த தேதியில் இருந்து எந்த தேதிவரை விண்ணப்பிக்கலாம், எந்த தேதியில் எழுத்து தேர்வு நடைபெறும், எந்த தேதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும், நேர்முகத்தேர்வு எந்ததேதியில் நடத்தப்படும் ஆகிய முழு விவரங்கள் அடங்கிய வருடாந்திர திட்ட அறிக்கை பட்டியல் விவரம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதை தேர்வாணைய செயலாளர் எம்.விஜயகுமார், தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2015-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். 2014-ம் ஆண்டு 15 ஆயிரம் பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

*2015-ம் ஆண்டு பிப்ரவரி 2-வது வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகும். இந்த பணிக்கு 4 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும்.

*குரூப்-2 நேர்முகத்தேர்வு உள்ள 904 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 3-வது வாரத்தில் வெளியாகும். முதல்நிலை எழுத்துத்தேர்வு மே மாதம் 10-ந் தேதியும், மெயின்தேர்வு செப்டம்பர் 26-ந் தேதியும் நடைபெறும்.

*குரூப் 3 நேர்முகத்தேர்வு கொண்ட 25 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் 17-ந்தேதி நடத்தப்படும்.

* உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க பிப்ரவரி 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். இதற்கான தேர்வு மே மாதம் 31-ந் தேதி நடைபெறுகிறது.

*சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, துணை சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்து மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4-வது வாரத்தில் வெளியாகிறது. தேர்வு ஜூன் மாதம் 14-ந்தேதி நடைபெறுகிறது.

*புள்ளியியல் புலன்ஆய்வாளர்கள்(ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்கள்) காலிப்பணியிடங்கள் 268 உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4-வது வாரத்தில் வெளியாகும். தேர்வு ஜூன் 20-ந்தேதி நடைபெறும்.

*47 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். முதல் நிலைத்தேர்வு ஜூலை 5-ந் தேதியும், மெயின்தேர்வு டிசம்பர் 5-ந் தேதி முதல் 7-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

*564 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு இல்லாதது) தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்டு 16-ந்தேதி நடைபெறும்.

*வட்டார சுகாதார புள்ளியியல் நிபுணர்கள்(பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்ட்சியன்) காலிப்பணியிடங்கள் 36 உள்ளன. அந்த பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு ஏப்ரல் மாதம் 4-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 12-ந்தேதி நடைபெறும்.

*கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் இன்னும் வந்து சேரவில்லை. தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.

*வன பயிற்சியாளர் (பாரஸ்ட் அப்ரண்டிஸ்) காலிப்பணியிடங்கள் 27 உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 31-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும்.

* குரூப் -4 காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு நவம்பர் 15-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக காந்தி நினைவுநாளையொட்டி தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணைய அலுவலகத்தில் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊழியர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆணைய உறுப்பினர்கள் டாக்டர் பன்னீர்செல்வம், ரத்தினசபாபதி, குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top