
அரைஇறுதியில்...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த கால்இறுதியில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது.
இதன் மூலம் மீண்டும் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை தவற விட்ட பாகிஸ்தான் அணி, ‘உலக கோப்பையில் இந்தியாவை வென்றதில்லை’ என்ற சோகத்துக்கு முடிவு கட்ட மேலும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
நடப்பு சாம்பியனான இந்தியா, வருகிற 26-ந்தேதி சிட்னியில் அரங்கேறும் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவுடனான மோதல் ‘யுத்தம்’ போன்று இருக்கும் என்பதால் இந்த ஆட்டம் இப்போதே எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.
கிளார்க் பேட்டி
இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் நேற்று அளித்த பேட்டியில், ‘டோனியின் தலைமையில் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த சவாலை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
அரைஇறுதிக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக காலஅவகாசம் உள்ளது. அதற்குள் முழுவீச்சில் தயாராவோம். எங்களது அணுகுமுறையில் மாற்றம் இருக்காது. இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி சுற்றையும் இறுதிப்போட்டியாக நினைத்தே விளையாடுவோம்’ என்றார்.
கடந்த உலக கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது குறிப்பிடத்தக்கது.
No comments :