
மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி BSNL-ன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
BSNL நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை 50%-மாக குறைக்க முடிவு செய்துள்ளோம். 3G கேப்பாசிட்டியில் 90 சதவீதம் அளவுக்கு BSNL முழுமையடைந்துவிட்டது. இருந்தாலும், இப்போதே டேட்டா கட்டணத்தை குறைத்து விட்டால் திடீரென நெட்வொர்க்கில் Traffic அதிகமாகி ஓவர்லோடு ஆகிவிடும். எனவே, Traffic-ஐ போதுமான அளவுக்கு கையாள வசதிகள் செய்யப்பட்ட பிறகு கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7-வது கட்ட விரிவாக்கப்பணிகள் ரூ.4800 கோடி செலவில் நடந்து வருகின்றன. வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு பிறகு விலை குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரைவில் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க் கெப்பாசிட்டியை அதிகரித்து நாடு முழுவதும் 2500 நகரங்களில் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் பி.எஸ்.என்.எல் அமைக்கவுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பி்.எஸ்.என்.எல்-க்கு 3G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நெட்வொர்க் வசதிகள் உருவாக்குவதில் கடுமையான விதிமுறைகள் இருந்ததால் 2009 முதல் 2013 வரை முதலீடு செய்ய முடியவில்லை. 2010-ம் ஆண்டு 3G மற்றும் பிராண்ட்பேண்ட் வயர்லெஸ் ஆக்சஸூக்கு கட்டணம் செலுத்திய பின் கடுமையான நிதி நெருக்கடிக்கு பி.எஸ்.என்.எல். ஆளானது நினைவு கூரத்தக்கது.
தற்போது முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 2G டேட்டாவுக்கு வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக பி.எஸ்.என்.எல் 3G டேட்டாவை வழங்கி வருகிறது. குறிப்பாக, 1GB அளவு 3G இண்டர்நெட் ரூ.175-க்கும், 2GB ரூ.251-க்கும் வழங்கி வருகிறது.
No comments :