
வரும் வெள்ளிக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக காத்திருக்கும் இந்திய அணி அப்போட்டியில் சிறப்பாக விளையாடாது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார்.
கிளைவ் லாய்டு 1974 முதல் 1985 வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்தவர். தொடர்ந்து 27 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே இன்றி 11 வெற்றிகளைத் தேடித் தந்தவர்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் தன்னை வசீகரித்துள்ளதாகவும் தோனி தலைமையிலான அணி உலகக்கோப்பைக்கு முழுமையான அணியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் “கோலி கடந்த இரண்டு வருடமாக அதிரடியான ஆட்டக்காரராக வலம் வருகிறார். அவரைப் போலவே தற்போது ஷிகர் தவானும் அதிரடியாக ஆடி வருகிறார். இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே அதன் பேட்டிங் மற்றும் பவுலிங்கை நாம் குறை சொல்ல முடியாது. இந்திய அணி எப்போதுமே வல்லமை மிக்க அணியாகவே உள்ளது. ஆனால் அந்த வல்லமையை மக்கள் எப்போதுமே எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடாது என்று நம்புகிறேன்” என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க இந்தியா திணறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கிளைவ், “அது எனக்கு தெரியாது. அது அன்று நடக்கும் ஆட்டத்தை பொருத்தது. நிச்சயமாக அவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக ஆடி வருகிறார்கள். பந்து வீச்சை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தி அவர்களுக்கு இருக்கிறது” என்றார்.
No comments :