
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஷகியுர் ரஹ்மான் லக்வி (55). இதையடுத்து, தீவிரவாதியான லக்வியும், தாக்குதலில் சம்பந்தப்பட்ட அப்துல் வாஜித், மசர் இக்பால், ஹமது அமின் சாதிக், சாதிக் ஜமீல் ரியாஸ், ஜமீல் அஹமது மற்றும் யூனிஸ் அஞ்சும் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கான வழக்கு விசாரணை 2009-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் தீவிரவாதி லக்வியை டிசம்பர் 18, 2014-அன்று பாகிஸ்தானின் Anti-Terrorism Court ஜாமீனில் விடுதலை செய்வதாக அறிவித்தது.
இதற்கு இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து, மீண்டும் லக்வியை பாகிஸ்தான் அரசு கைது செய்தபோது நீதிபதி குரேஷி போதுமான ஆதாரம் இல்லையென கூறி லக்வியை கைதுக்கு தடை விதித்தார். நீண்ட போராட்டத்திற்கு பின் ஆப்கானிஸ்தானியர் ஒருவரை கடத்தியதாக லக்வியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு. இப்போது லக்வி உயர் பாதுகாப்பு போடப்பட்ட ராவல்பிண்டி அடியாலா சிறையில் காலத்தை கழித்து வருகிறார்.
இந்நிலையில், தீவிரவாதி லக்விக்கு ஜெயிலில் சொகுசான டிவி, மொபைல், இண்டர்நெட் வசதிகள் தரப்பட்டுள்ளதாக பி.பி.சி. உருது பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:-
தீவிரவாதி லக்வியை தினமும் 100 பேராவது வந்து பார்த்து பேசிவிட்டு செல்கின்றனர். வாரத்தின் ஏழு நாட்களிலும் எப்போது வேண்டுமானாலும் எந்நேரத்திலும் யார் வேண்டுமானாலும் அவரை பார்க்க அனுமதி தரப்படுகிறது. அவரை சந்திக்க தனியாக எந்த அனுமதியும் (Special Permission) வாங்க வேண்டிய அவசியமில்லை. அவரை பார்க்க வருபவர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தங்கள் அடையாள அட்டைகளை கூட காட்ட வேண்டியதில்லை. அந்த அளவுக்கு சிறையில் லக்விக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அவருக்கு 24 மணிநேரமும் தடையில்லா இண்டர்நெட் வசதி, மொபைல், டி.வி வசதிகளும் தரப்பட்டிருக்கிறது. இது ஏன் என்று புரியாத புதிராகவே உள்ளது.
No comments :