ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட உடல்கள் மறுபிரேத பரிசோதனை: ஐகோர்ட்டில் 13-ந் தேதி விசாரணை.



ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது 13-ந் தேதி விசாரணை நடக்கிறது.


மறுபிரேத பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டைகிரிபாளையத்தை சேர்ந்த முனியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘கடந்த 7-ந் தேதி செம்மரம் வெட்டச் சென்ற என் கணவர் சசிகுமார் உள்பட 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. என் கணவர் செம்மரம் வெட்டும் தொழிலுக்கு ஒருநாள்கூட போனது கிடையாது. கூலி வேலைக்காக திருத்தணிக்கு சென்ற அவரை கொன்றுள்ளனர். என் கணவரின் சாவில் மர்மம் உள்ளது. எனவே திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சசிகுமார் மற்றும் உறவினர்கள் 5 பேரின் உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பாலு ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

ஒத்திவைப்பு

கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படாத பட்சத்தில், உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்வதற்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. இந்த ஐகோர்ட்டின் அதிகார வரம்புக்குள் ஆந்திர மாநிலம் வராது. அப்படி இருக்கும்போது மறு பிரேதபரிசோதனைக்கு எப்படி உத்தரவிட முடியும் என்று நீதிபதி கேட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு ஐதராபாத் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.

மேல் முறையீடு

இதையடுத்து வக்கீல் கே.பாலு, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு ஆஜராகி, ‘தனி நீதிபதியின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுவை 11-ந் தேதி (இன்று) தாக்கல் செய்யவும், அந்த மனுவை 13-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டனர். 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top