
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய மிருகவெறி தாக்குதல்களில், மூளையாக செயல்பட்டவர்,
ஜாகியுர் ரகுமான் லக்வி (வயது 55). லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான இவர், மும்பை தாக்குதல் வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதும், அவரது கூட்டாளிகள் 6 பேர் மீதும் இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் கடந்த 2009-ம் ஆண்டு, நவம்பர் 25-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர் 5 ஆண்டுகள் முடிவடைந்தும், இந்த வழக்கின் விசாரணை சூடுபிடிக்கவில்லை.
இந்த நிலையில், லக்விக்கு, இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால் இதற்கு பாகிஸ்தானிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து அவரை பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டப்பிரிவு 16-ன் கீழ், சிறையில் அடைக்க நவாஸ் ஷெரீப் அரசு உத்தரவிட்டது. அத்துடன் இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டு வழங்கிய ஜாமீனை எதிர்த்து, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் எப்.ஐ.ஏ. முகமையினர் அப்பீல் மனு தாக்கல் செய்து, அது இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டப்பிரிவு 16-ன் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, லாகூர் ஐகோர்ட்டில் லக்வி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, அவரை பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டப்பிரிவு 16-ன் கீழ் சிறையில் அடைத்ததை ரத்து செய்து, விடுவிக்குமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. லக்விக்கு எதிரான சரியான ஆவணங்களை கோர்ட்டில் அரசு தாக்கல் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்று இந்தியா கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில் லாகூர் ஐகோர்ட்டு உத்தரவை, ராவல்பிண்டி அடியலா சிறையில் லக்வியின் வக்கீல் நேற்று வழங்கினார். இதையடுத்து, 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த நிலையில், லக்வி நேற்று மதியம் 1.40 மணிக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, வெளியே வந்தார்.
அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் காரில் ஏறி சென்றார். முதலில் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ரகசிய இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியின் இடையே நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா விரும்புகிறது. ஆனால் அங்கு நடந்துள்ள சமீபத்திய நிகழ்வு (லக்வியின் ஜாமீன்) துரதிர்ஷ்டவசமானது. ஏமாற்றம் அளிக்கிறது” என கருத்து தெரிவித்தார்.
லக்வி, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிடுகையில், “லக்வியின் விடுதலை, மிகவும் ஏமாற்றம் அளிக்கிற ஒரு அறிவிப்பு ஆகும். மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இது அவமதிப்பு. தீவிரவாதத்தை பொறுத்தமட்டில் பாகிஸ்தானின் இரட்டை நிலையை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என கூறினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து, மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான லக்வி விடுதலை செய்யப்பட்டதற்கு இந்தியாவின் கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்ததாக வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாரீஸ் நகரில் பிரதமர் மோடி நேற்று பிரான்சு அதிபர் பிராங்காய்ஸ் ஹோலண்டேயை சந்தித்து பேசிய போது, லக்வி விடுதலை பிரச்சினையும் அதில் இடம்பெற்றதாகவும், லக்வி விடுதலை செய்யப்பட்டது குறித்து மோடி மிகுந்த அதிர்ச்சி தெரிவித்ததாகவும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments :