ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் நிரந்த இடம் இந்தியாவுக்கு - மோடி வலியுறுத்தல்.



ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு விரைவில் நிரந்த இடம் - மோடி வலியுறுத்தல்ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும், இந்த அங்கீகாரத்தை விரைவாக வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ஜெர்மனிக்குப் புறப்படும் முன்பாக, பாரீஸில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசினார். அப்போது, அவர் மேலும் பேசியதாவது: முதல் உலகப் போரில் இருந்து, ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், உலக அமைதிக்காக இந்தியா எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளது. ஐ.நா. அமைதிப் படையில் மிகப்பெரிய பங்களிப்பாளராக இந்தியா உள்ளது. எனினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் ஏக்கம், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலக அமைதிக்காக, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு உலக நாடுகள் மதிப்பளிக்க வேண்டிய நேரம் இது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது இந்தியாவின் உரிமையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அஹிம்சை, அன்பு ஆகியவற்றை போதித்த மகாத்மா காந்தி, கெளதம புத்தர் ஆகிய மகான்களை, இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடும் பெற்றிருக்கவில்லை. ஐ.நா. சபை, தனது 70-ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இதுகுறித்து சிந்திக்க வேண்டும். தற்போதைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சமகால யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கவில்லை. எனவே, விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும். முதல் உலகப் போரில், பிரான்ஸூக்கு ஆதரவாக 14 லட்சம் இந்தியர்கள் பங்கேற்றனர். அந்தப் போரில் வீரமரணம் அடைந்த 10,000 இந்தியர்களுக்காக, பிரான்ஸ் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, உலக அமைதிக்காக இந்தியர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்து வருகின்றனர். இதை உலக நாடுகள் உணர வேண்டும். இந்தியாவின் பல ஆண்டு கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இந்தியா ஒருபோதும் யாருக்கும் தீங்கிழைக்கும் வகையில் செயல்பட்டதில்லை என்ற உண்மை தெரியவரும். சில நேரங்களில் வரலாறு மறக்கப்படுகிறது. யார் ஒருவர் வரலாற்றை மறக்கிறார்களோ, அவர்கள் தங்கள் உரிமையையும் இழப்பார்கள்," என்றார் மோடி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் சீர்திருத்தம் செய்து, அதில் தங்களுக்கும் நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top