
கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஆட்டோ, கார் உள்பட தனியார் வாகனங்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முழு அடைப்பு
மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையை 100 சதவீதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும், ரப்பர் இறக்குமதி காரணமாக ஏற்பட்டுள்ள ரப்பர் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வலியுறுத்தி கேரள விவசாயிகள் சங்கம் சார்பிலும், ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை தொடர்பான மீனா குமாரி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ தொழிலாளர்கள் சார்பிலும் நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தையொட்டி கேரளா முழுவதும் நகர்ப்புறங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோ, டாக்சி, சரக்கு வாகனங்கள், பஸ்கள் உள்பட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை.
ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் வழக்கம்போல் கடைகள் திறந்து இருந்தன.
பஸ் மீது கல்வீச்சு
கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை. போராட்டத்தையொட்டி, மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இடது முன்னணி கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் போராட்டம் தீவிரமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் அரசு பஸ்களையும் இயக்க போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் காட்டாக்கடையில், கேரள அரசு பஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொச்சியில் காரில் சென்ற பிரதீப்குமார் எம்.எல்.ஏ.விடம் கேள்விகேட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தாக்கப்பட்டனர். இதனால் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் கொச்சி ரெயில் நிலையத்திற்கு வந்த முன்னாள் எம்.பி. பன்னியன் ரவீந்திரனையும் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தையொட்டி, நேற்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் இயங்கிய போதிலும் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது.
கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததாலும், ஆட்டோ, டாக்சி உள்பட தனியார் வாகனங்கள் ஓடாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
No comments :