
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 298 மையங்களில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நாளை 10 மணிக்கு வெளியாகிறது.
தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்வு முடிவுகளை, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களில், கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிபெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு 22ம் தேதி முதல் பள்ளி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments :