பாமா வருகையை முன்னிட்டு, டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுமார் 80 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற 10 ஆயிரம் துணை நிலை ராணுவ வீரர்கள் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ஆக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
என்றாலும் அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா பாதுகாப்புக்காக 1600 வீரர்களை அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. இந்த 1600 வீரர்களும் ஒரு கொசுவை கூட ஒபாமா அருகில் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்துவதற்காக 6 விமானங்கள் நிறைய நவீன கருவிகளும் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கருவிகளை கொண்டு 2 இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளனர்.
ஒபாமா செல்லும் பாதைகளை கண்காணிக்க தனி ராடார் பொருத்தப்பட்டுள்ளது. எங்காவது வெடி குண்டு பதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பல நவீன கருவிகளை டெல்லி போலீசார் வைத்துள்ளனர்.
என்றாலும் வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களை கூட அமெரிக்க வீரர்கள் கையோடு அழைத்து வந்துள்ளனர்.
ஒபாமா ராஜபாதை பகுதியில் சுமார் 2 மணி நேரம் தங்கி இருந்து அணி வகுப்பை பார்வையிடுவார். எனவே ராஜபாதை அருகில் உள்ள 71 உயரமான கட்டிடங்களை அமெரிக்க பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஒபாமா செல்லும் வழிகளில் ஏற்கனவே டெல்லி போலீசார் சுமார் 10 ஆயிரம் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி உள்ளனர். ராஜபாதையில் மட்டும் 165 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் இது போதாது என்று அமெரிக்க பாதுகாப்பு படையும் ரகசிய காமிராக்களை பொருத்தி வருகிறது. ஒபாமா செல்லும் இடங்களில் உள்ள புல்லை கூட ஸ்கேன் செய்து விடும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களின் நடவடிக்கைகள் உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மிரள செய்யும் வகையில் உள்ளதாக டெல்லி மக்கள் பேசுகிறார்கள்.
No comments :