
புதுடெல்லி,
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது நாய் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 3 நாள் சுற்றுப்பயணமாக ஒபாமா, அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்–1’ விமானம் மூலம் இன்று காலை 9;40 மணிக்கு டெல்லி வந்தார். டெல்லியில் பாலம் என்ற இடத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஒபாமாவின் விமானம் தரை இறங்கியது. அங்கு அவரை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். சிறிதுநேரம் ஓய்வெடுத்த பின்னர் மதியம் ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள விரிப்புடன் ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்
ஒபாமாவின் வருகையை யொட்டி, டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வளாகத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வரஇருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக அந்த வளாகத்துக்குள் திடீரென்று தெரு நாய் ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நாயை துரத்தினார்கள். அது அங்கும் இங்குமாக ஒடி போக்கு காட்டியது. என்றாலும் தீவிரமாக போராடி அந்த நாயை பிடித்து வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள்.
ஒபாமாவின் வருகையை யொட்டி, டெல்லியில் குரங்குகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர். குரங்கு பிடிப்பவர்களும், நாய் பிடிப்பவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். என்றாலும் பலத்த பாதுகாப்பையும் மீறி அழையா விருந்தாளியாக ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் நாய் நுழைந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments :