அமெரிக்க முன்னாள் அதிபர்களின் மனைவியர் லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்தபோது ஸ்கார்ப் அணியவில்லை, அதையே மிஷேல் ஒபாமாவும் பின்பற்றியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் மாளிகை மூத்த செய்தித் தொடர்பாளர் எரிக் சல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மூன்றுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வும் அவரது மனைவி மிஷேல் ஒபாமாவும் கடந்த 27-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு சென்றனர்.
அப்போது மிஷேல் ஒபாமா தனது கூந்தலை மறைக்கும் வகையில் ஸ்கார்ப் அணியாதது ஏன் என்று அவருக்கு எதிராக ட்விட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மிஷேல் ஸ்கார்ப் அணியாததால் அந்த நாட்டு அரசு தொலைக் காட்சியில் அவரது உருவத்தை மங்கலாக்கி ஒளிபரப்பியதாக செய்தி வெளியானது. இதனை சவுதி அரேபிய வெளியுறவுத் துறை ஏற்கெனவே மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு மூத்த அதிகாரிகள் கூறியபோது, மிஷேல் சவுதிக்கு வந்ததுமுதல் மன்னர் சல்மானை சந்தித்தது வரை அனைத்தையும் சவுதி அரசு தொலைக்காட்சி முழுமையாக ஒளிபரப்பியது. அவரது உருவம் மங்கலாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மிஷேலுக்கு எதிராக ட்விட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எனினும் மேற்கத்திய ஊடகங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.
‘சவுதிக்கு சென்றபோது உடல் முழுவதையும் மறைக்கும் வகை யில் மிஷேல் கண்ணியமாக உடை அணிந்திருந்தார். அவர் எந்த தவறும் இழைக்கவில்லை, இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மிஷேல் ஒபாமா கருத்து தெரிவித்து மறுத்துவிட்டார். எனிவும் அமெரிக்க அதிபர் மாளிகை மூத்த செய்தித் தொடர்பாளர் எரிக் சல்ட்ஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்கும்போது, இதற்கு முன்பு முன்னாள் அதிபர்களின் மனைவி யர் லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சவுதி சென்றபோது ஸ்கார்ப் அணியவில்லை. அதையே மிஷேலும் பின்பற்றியுள் ளார். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றார்