இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள உல்லாசப் பூங்காவில் மகிழ்ச்சிகரமாக பொழுதை கழித்து வருகிறார்கள்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் படுதோல்வி என்று இன்னும் ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை.
2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பாகிஸ்தானை வருகிற 15-ந்தேதி அடிலெய்டில் சந்திக்கிறது. அதற்கு முன்பாக 8-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 10-ந்தேதி ஆப்கானிஸ்தானுடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களிலும் விளையாட இருக்கிறது.
அண்மை காலமாக மோசமான ஆட்டத்தால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கிறது. ஆனால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்திய வீரர்கள் உல்லாசப் பூங்காவில் பொழுதை போக்கி வருகிறார்கள்.
அடிலெய்டில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சாகச பூங்காவுக்கு இரண்டு நாள் பயணமாக இந்திய கேப்டன் டோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா மற்றும் மாற்று வீரர் வரிசையில் இருக்கும் மொகித் ஷர்மா ஆகியோர் சென்றனர். இங்கு ஜாலியாக படகில் சென்று மீன் பிடிப்பது, செயற்கையான மலையேற்ற சாகசம் போன்ற வசதிகள் உள்ளன. இங்குள்ள வசதிகளை அனுபவித்து இந்திய வீரர்கள் உற்சாகமாக பொழுதை கழிக்கிறார்கள்.
முத்தரப்பு தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததும், கடினமான தொடரில் விளையாடி வரும் எங்களுக்கு உலக கோப்பைக்கு முன்பாக ஓய்வு தேவை. அப்போது தான் புத்துணர்ச்சியுடன் திரும்ப முடியும் என்று டோனி கூறியிருந்தார். அதன்படி இந்திய வீரர்கள் ரிலாக்சாகி வருகிறார்கள்.








No comments :