
மத்திய ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் தலைமையிலான டேக் கவுன்சில் அதிநவீன அவாக்ஸ் (AWACS) ரேடாரை உள்நாட்டிலேயே உருவாக்க அனுமதியளித்துள்ளது.
அவாக்ஸ் ரேடார்
வான்வழி எச்சரிக்கை அமைப்பான அவாக்ஸ் (AWACS) ரேடார் தொழில்நுட்பம் இன்று பல நாடுகளில் போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 400 கிலோ மீ்ட்டர் தொலைவிற்கு அப்பாலில் ஆயுதங்களோடு உலவும் எதிரிநாட்டு போர் விமானங்களையும் கூட எளிதாக கண்டுபிடித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் திறன் வாய்ந்ததே இந்த அவாக்ஸ் ரேடாராகும். பொதுவாக, எதிரிநாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க விமானத்தில் இந்த அவாக்ஸ் ரேடார் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரேடாரை விமானத்தின் மேற்கூரையில் டிஷ் ஆண்டனா வடிவத்தில் பொருத்துவது வழக்கம். வானில் அதிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் போதே வெகு தொலைவில் உள்ள எதிரிகளின் விமான நடமாட்டத்தை துல்லியமாக கண்டுபிடித்து தகவல் அனுப்புகிறது இந்த அவாக்ஸ் ரேடார். எனவே, தான் இதை "eyes in the sky" (வானத்தின் கண்கள்) என்று அழைக்கிறார்கள்.
இந்தியாவின் அவாக்ஸ் - சிறப்பம்சங்கள்
ரூ.5,113 கோடி செலவில் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் அவாக்ஸ் ரேடார் 360 டிகிரி கவரேஜ் கொடுக்கும் (AESA) எலக்ட்ரானிக் ஸ்கேன்டு தொழில்நுட்பத்தை கொண்டதாகும். இதை ஏர்பஸ்-ஏ-330 ரக அகன்ற உருவத்தை கொண்ட ஜெட் விமானங்களில் மட்டுமே பொருத்த முடியும். இவற்றை முழுமையாக தயாரித்து முடிக்க 5-7 ஆண்டுகள் வரை ஆகும். முதற்கட்டமாக, 2 ரேடார்கள் மட்டுமே தயாரிக்கும் இந்தியா விரைவில் 6 அவாக்ஸ் ரேடார்களை உருவாக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், ஜெர்மனி சுற்றுப்பயணத்தின் போது ஐரோப்பிய ஏர்பஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, 240-டிகிரி கவரேஜ் கொண்ட மினி அவாக்ஸ் பிராஜெக்ட் செயல்பாட்டில் இருக்கிறது. அவாக்ஸ் ரேடாரின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:-
இந்திய வான் எல்லைக்குகள் அனுமதியின்றி அத்துமீறும் விமானங்கள், போர் விமானங்கள், போர்க் கப்பல்களை 400 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தே கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புகிறது.
தற்காப்புக் கருதி விமானத்தாக்குதல் நடத்தும் போது இந்த ரேடாரின் சேவை இன்றியமையாததாகும்.
வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு அவாக்ஸ் விமானமானது அங்கிருந்து கொண்டே சுமார் 3 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை தீவிரமாக கண்காணிக்க முடியும்.
மற்ற நாடுகளில் அவாக்ஸ்
ஆசியாவை பொறுத்தவரை சீனா புதிய மற்றும் பழைய தொழில்நுட்பத்தை தழுவிய 20-க்கும் மேற்பட்ட அவாக்ஸ் ரேடார்களை கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே, 4 ஸ்வீடன் நாட்டு அவாக்ஸ் ரேடாரையும், கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4 ஈகிள் அவாக்ஸையும் கொண்டுள்ளது.
No comments :