
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடாமல் எளிதாக தோல்வியடைந்து விட்டதாக அந்நாட்டு நாளிதழ்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள டெய்லி டெலிகிராப் நாளிதழ் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தோனி மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தையே நம்பி இருந்தது. ஆனால் இருவரும் ஏமாற்றிவிட்டனர். மேலும் தோனி பேட்டிங்கின் போது கடுமையாக போராடுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் எளிதாக விட்டு கொடுத்துவிட்டார் என அந்நாளிதழ் கூறியுள்ளது.
மேலும் ரன் அவுட்டின் போது தோனி டைவ் அடிக்கவோ அல்லது பேட்டை வைத்து சரித்து கொண்டு உள்ளே வரவோ பெரிய அளவில் முயற்சிக்கவில்லை. அவர் கடுமையாக முயற்சித்திருந்தால் நிச்சயமாக ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது டெய்லி டெலிகிராப்.
மற்றொரு முக்கிய நாளிதழான சிட்னி மார்னிங் ஹெரால்ட், மேக்ஸ்வெல்லின் அற்புதமான த்ரோவால் தோனி அவுட் ஆவது வரையில் ஆஸ்திரேலியா பதற்றமாகவே இருந்தது. ஆனால் அவர் ஏன் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடாமல், வினோதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தெரியவில்லை என்று மார்னிங் ஹெரால்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
No comments :