திவாலாகும் நிலை இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது’; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்.




தமிழக அரசின் கடன் வரம்பிற்குள் உள்ளது என்றும் திவாலாகும் நிலை இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது என்றும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.


சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர் மு.க.ஸ்டாலின்(தி.மு.க.) கலந்து கொண்டு பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு-

கடனை செலுத்த முடியாத நிலை

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.)-தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை உள்ளது. இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசியிடம் தமிழக அரசு முறையிட்டு இருக்கிறதா? கடன் வரம்பு அதிகரித்து உள்ளது. சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடனை திரும்பி செலுத்த முடியாத நிலையில் அரசு இருக்கிறது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-இங்கே உறுப்பினர் மு.க.ஸ்டாலின் நஷ்டம் என்றும், கடன்கள் குறித்தும் பேசுகிறார். இதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

ஒரு அரசின் பொதுக்கடன் நிலையைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றால் முதலாவதாக அந்த அரசு வைத்துள்ள திரும்பிச்செலுத்தவேண்டிய மொத்த கடன் அளவு எவ்வளவு? இது மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவு எவ்வளவு உள்ளது? இரண்டாவதாக அவ்வாறு திரும்பச் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியைச்செலுத்தக் கூடிய வலுவான நிதி நிலையில் அந்த அரசு இருக்கிறதா? குறிப்பாக வருவாய் வரவில் திரும்பிச்செலுத்த வேண்டிய வட்டி சதவீதம் எவ்வளவு? மூன்றாவதாக இவ்வாறு பெறப்படும் கடன், முறையாக மூலதனப்பணிகளிகளுக்காக செலவிடப்படுகின்றதா?

3 அளவுகோல் அடிப்படையில்...

இந்த மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு மாநிலத்தின் கடன் அளவு மோசமான நிலையில் உள்ளதா அல்லது அளவிற்குள் உள்ளதா? அரசு திறமையாக செயல்படக்கூடிய வகையில் அத்தகைய கடனைக் கையாண்டு வருகிறதா என்பது தெளிவாகும்.

முதலாவதாக தமிழக அரசின் கடன் அளவை எடுத்துக்கொண்டால் 2014-2015-ம் ஆண்டு இறுதியில் திருப்பிச்செலுத்த வேண்டிய மொத்தக் கடன் அளவு 1,81,036 கோடி ரூபாய். அதாவது 2014-2015 அந்த ஆண்டு இறுதி மார்ச் வரைக்கும். இது மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 19.21 சதவீதம் ஆகும். 2015-2016-ம் ஆண்டின் இறுதியில் அதாவது அடுத்த ஆண்டு இறுதியில் திருப்பிச்செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு 2,11,483 கோடி ரூபாயாக இருக்கும். வருகின்ற 2015-2016 நிதியாண்டினுடைய இறுதியில் அடுத்த மார்ச்சில் ரூ.2,11,483 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

திருப்பி செலுத்த வேண்டிய வட்டி

இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.24 சதவீதம் ஆகும். ஒரு மாநிலத்தின் கடன் அளவு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்றால் அது 25 சதவீதம் அளவை தாண்டக்கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அளவை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள்ளாகவே இந்த அரசு பராமரித்து வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் 2011-2012-ம் ஆண்டில் 19.84 சதவீதமாக இருந்த இந்த அளவு 2014-2015-ம் ஆண்டு இறுதியில் 19.21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடனளவு குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளை எடுத்துவரும்பொழுது கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒரு தவறான வாதமாகும்.

இரண்டாவதாக இத்தகைய கடனை முறையாக தமிழக அரசு செலுத்தி வருகிறது. 2014-2015-ம் ஆண்டிற்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டி 14,755 கோடி ரூபாய். இது 2015-2016-ம் ஆண்டில் 17,139 கோடியாகும். இந்த அளவு மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவீதமே. அதாவது நாம் திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவு 12.01 சதவீதம்.

திவாலாகும் நிலை ஏற்படாது

2001-2002-ம் ஆண்டில் இந்த அளவு 18.67 சதவீதமாக இருந்ததை, அதாவது நீங்கள் ஆட்சியை விட்டு போகும்போது, ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது 18.67 சதவீதமாக இருந்தது. இது செலுத்தக்கூடிய வட்டியினுடைய சதவீதம். இப்போது 12.01 சதவீதமாகக்குறைக்கப்பட்டிருக்கிறது. ஆக 18.67 சதவீதமாக இருந்ததை படிப்படியாக குறைத்து 2005-2006-ம் ஆண்டில் 13.42 சதவீதமாக்கப்பட்டது.

மாநிலத்தின் வருவாய் வரவு உயரும்போது அதற்கு ஏற்றவாறு கூடுதலாக செலுத்த வேண்டிய வட்டியும், செலுத்தவேண்டிய திறனும் அந்த மாநில அரசுகளுக்கு ஏற்படும். இதன் அடிப்படையில் தான் தமிழக அரசு கடன் வரம்பிற்குள் உள்ளது என்றும் கடனைத்திருப்பிச் செலுத்தமுடியாத நிலை ஏற்படவில்லை என்றும், திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மூலதன செலவுகளுக்கு...

மூன்றாவதாக, பெறப்பட்ட கடன் எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதைப்பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப்பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட கடன் அளவு 79,687 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூலதனச்செலவு 79,528 கோடி ரூபாயாகும். வாங்கப்பட்ட கடனும் 79,000 கோடி ரூபாய், செலவழிக்கப்பட்ட மூலதனச்செலவும் 79,000 கோடி ரூபாய். இதிலிருந்து ஊதாரித்தனமாக செலவழிக்க வில்லை என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள். எனவே, பெறப்பட்ட கடன் மூலதனப்பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது என்பதைத்தெரிவிக்க விரும்புகிறேன்.

மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழக அரசு பெற்றுள்ள கடனும் அது திருப்பிச் செலுத்துகின்ற வட்டிச் சுமையும் கட்டுக்குள் உள்ளது.

கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவை எடுத்துக்கொண்டால் அதற்கு 2014-2015-ம் ஆண்டு வரவு செலவு திட்டப்படி உள்ள கடன் 62,72,387 கோடி ரூபாய். இந்தக்கடன் அளவு நாட்டின் உற்பத்தி மதிப்பில் 48 சதவீதமாக உள்ளது. நாம் எத்தனை சதவீதத்தில் இருக்கிறோம். 19 சதவீதத்திலே இருக்கிறோம். இது 2015-2016-ல் 68,94,691 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழக அரசின் மொத்த கடனுக்கும் மாநில மொத்த உற்பத்தி மதிப்பிற்குமான விகிதம் மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்றபோது மாநிலத்தினுடைய சொந்தவரி வருவாய், வணிக வரி, ஆயத்தீர்வை, முத்திரைத்தீர்வை, மோட்டார் வாகன வரி, இதர வரிகள் மூலமாக பெறப்படுகிறது. 2011-2012-ம் ஆண்டுக்கணக்குப்படி 59,517.30 கோடி ரூபாய் நம்முடைய மாநிலத்தின் சொந்தவரி வருவாயாகக்கணக்கிடப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி

இந்த வருவாய் 2012-2013-ம் ஆண்டு 71,254.28 கோடி ரூபாயாக உயர்ந்து, மீண்டும் 2013-2014 கணக்குப்படி, 73,718.10 கோடி ரூபாயாக உயர்ந்து 2014-2015 திருத்த மதிப்பீட்டின்படி 85,769.27 கோடி ரூபாய் ஆக இருக்கும் என்றும் வருகின்ற 2015-2016 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி இந்த வருவாய் வரவு 96,083.41 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2015-க்கும் 2016-க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அளவை நாம் இங்கே கழிக்கும் போது 36,565.84 கோடி ரூபாய் வருவாய் வரவில் நமக்கு வளர்ச்சி சதவிகிதம் கூடியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? இந்தக்கடன் மூலதனச் செலவுகளுக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. மூலதனப் பணிகளுக்காகச் செலவழிக்கப்படுகின்ற அந்த நிதி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அப்போது நமது மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக, படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மு.க.ஸ்டாலின்:-110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது நடைபெற்று வரும் பணிகள் எந்த நிலைமையில் இருக்கிறது?

(அப்போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பதில் அளிக்க முயன்றார். அதற்குள் மு.க.ஸ்டாலின் இதற்கான பதிலை தாங்கள் பதிலுரையிலேயே தந்தால் போதும் என்றார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top