
உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததற்கு ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேப்டன் டோனிக்கு அவர் கடிதம் எழுதியதுடன், 1000 ரூபாய்க்கான காசோலையும் அனுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அமிதாப் தாக்கூர், தோனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் உள்ளீர்கள். வளர்ந்து வரும் ஒரு நாட்டில் கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி பெரும்பாலான மக்கள் வீட்டில் முடங்க செய்திருக்கிறீர்கள். கிரிக்கெட் என்ற போர்வையில் இந்த நாட்டு மக்களை அவர்களது பணிகளில் ஈடுபடாமல் செய்து வந்துள்ளீர்கள்.
உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி போட்டி நடந்தபோது பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகப் பணிகளை மறந்து தொலைக்காட்சி முன்னால் தான் இருந்தனர். இதில், இந்தியா தோல்வி கண்டதால் ரசிகர்கள் கிரிக்கெட் மாயையில் இருந்து விடுபடவும் நீங்கள்தான் காரணம். இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments :