சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தேசிய மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 


சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கடந்த 23–ந்தேதி தனது 91–வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக 1959-ம் ஆண்டு பதவி ஏற்ற அவர் சிறிய குட்டித்தீவை உலகமே வியக்கும் வண்ணம், பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் உச்சத்துக்கு கொண்டு சென்றார். 
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
லீ குவான் யூ மறைவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஒருவாரம் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது உடல் பாராளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. லீயின் உடலுக்கு கடந்த ஒருவார காலமாக சுமார் 5 லட்சம் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடல் சிவப்பு– வெள்ளை நிற சிங்கப்பூர் கொடியில் போர்த்தப்பட்டு திறந்த வாகனத்தில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுக திரண்டிருந்த மக்கள் லீயின் உடலை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். இறுதி ஊர்வலத்தின் போது சிங்கப்பூர் விமானப்படையின் 5 ஜெட் விமானங்கள் வானில் அணி வகுத்து சென்றன. ஊர்வலத்தின் முன்னே மோட்டார் சைக்கிள்களில் வீரர்களும் அணி வகுத்துச் சென்றனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை ஊர்வலம் அடைந்ததும் அங்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின் போது சைரன் ஒலிக்க நாடு முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுனம் கடைபிடித்து அஞ்சலி செலுத்தினார்கள். 

லீ இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

முன்னதாக லீயின் மறைவுக்கு மோடி அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிட்டார். அதில் லீ உலக சிந்தனைவாதி. இந்தியாவின் சிறந்த நண்பராக விளங்கினார். எனக்கு முன் மாதிரியாக விளங்கினார். ஒரு சகாப்தம் முடிந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து பாராளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். 

லீ இறுதி ஊர்வலத்தையொட்டி சிங்கப்பூரில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் முழுமையாக மூடப்பட்டது. வாகன போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top