பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 18 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசும் உயர்ந்தது.
சர்வதேச சந்தை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிப்ரவரி 1–ந்தேதிவரை, பெட்ரோல் விலை 10 தடவையும், அக்டோபர் மாதத்தில் இருந்து பிப்ரவரி 1–ந்தேதிவரை, டீசல் விலை 6 தடவையும் குறைக்கப்பட்டு வந்தது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் ரூ.17.11–ம், டீசல் விலை மொத்தம் ரூ.12.96–ம் குறைந்தது.
ஆனால், பிப்ரவரி 16–ந்தேதியும், மார்ச் 1–ந்தேதியும் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. பிறகு, ஏப்ரல் 2 மற்றும் 16–ந்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
கடும் உயர்வு
இந்நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.96 (உள்ளூர் வரிகளை சேர்க்காமல்) உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 உயர்ந்தது.
இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட இறக்குமதி செலவு உயர்வு காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாகவும் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டதாக இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை
இந்த விலை உயர்வை தொடர்ந்து, சென்னையில் ரூ.61.90 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.66.08 ஆக உயர்ந்தது. அதாவது, லிட்டருக்கு 4 ரூபாய் 18 காசு உயர்ந்துள்ளது.
ரூ.50.21 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, ரூ.52.76 ஆக உயர்ந்தது. இதன் விலை உயர்வு 2 ரூபாய் 55 காசு ஆகும்.
டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 59.20–ல் இருந்து ரூ.63.16 ஆகவும், டீசல் விலை ரூ.47.20–ல் இருந்து ரூ.49.57 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே சமயத்தில், மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை, ரூ.614–ல் இருந்து ரூ.608.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பும், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
No comments :