வேலூர்: ஆந்திரா எல்லையில் உள்ள மாத கடப்பா மலையில் குட்டையில் இருந்த,
விஷ சாராயம் கலந்த தண்ணீரை குடித்த, 64 ஆடுகள் மற்றும் நான்கு மாடுகள் பரிதாபமாக இறந்தது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, தமிழக, ஆந்திர மாநில எல்லைகளுக்கு மத்தியில், மாத கடப்பா மலை உள்ளது. இங்கு, இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கள்ளச் சாராயம் காய்ச்சி வருகின்றனர். கடந்த, சில தினங்களாக, மாத கடப்பா மலையில், போலீஸார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் விற்பனையாகாமல் இருந்த கள்ளச் சாராயத்தை, இரு மாநில, சாராய வியாபாரிகளும், அங்குள்ள குட்டையில் கொட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். நேற்று காலை, 6 மணிக்கு, மாதகடப்பா மலையடிவாரத்தில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.
காலை, 8 மணிக்கு, மாத கடப்பா மலையில் உள்ள குட்டையில் ஆடு, மாடுகள் தண்ணீர் குடித்துள்ளது. சிறிது நேரத்தில் ஆடுகள், மாடுகள் வாயில் நுரை தள்ளி இறந்தது.
மாத கடப்பாவைச் சேர்ந்த மங்கம்மாள், முனியம்மாள், யசோதா, முரளிதரன், யசோதா ஆகியோருக்கு சொந்தமான, 64 ஆடுகள், முனியாண்டிக்கு சொந்தமான, நான்கு மாடு இறந்தது. தகவலறிந்த, வாணியம்பாடி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments :