மாவோயிஸ்ட் தாக்குதலில் 7 போலீஸார் பலி சத்தீஸ்கர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் காயமடைந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்கள்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சனிக்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில்,
சிறப்பு அதிரடிப்படை போலீஸார் (எஸ்.டி.எஃப்) 7 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (நக்ஸல் எதிர்ப்பு அதிரடிப்படை) ஆர்.கே. விஜ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
சுக்மா மாவட்டம், டோர்னாபால் - சின்டகுவா இடையேயான பீட்மேல் வனப் பகுதியில் நக்ஸலைட் எதிர்ப்பு அதிரடிப்படை போலீஸார் 70 பேர் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை சுமார் 300 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாலாபுறமும் சுற்றிவளைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
சுதாரித்துக் கொண்டு அதிரடிப்படை போலீஸாரும் மாவோயிஸ்டுகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த துப்பாக்கிச் சண்டை சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.
இந்தச் சண்டையில், கமாண்டர் சங்கர் ராவ், தலைமை காவலர் ஹோஹித் சோடி உள்பட 7 போலீஸார் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலியாகினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், 2 ஹெலிகாப்டர்கள் மூலமாக ஜகதால்பூர், ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சண்டையில் உயிரிழந்த போலீஸாரின் உடல்கள், காங்கர்லங்கா என்னுமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அவர்களது உடல்களை அங்கிருந்து கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது உடல்கள் ராய்ப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதங்கள் கொள்ளையடிப்பு: தாக்குதல் நடத்திவிட்டு மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றபோது, அதிரடிப்படை போலீஸாரின் உடல்கள் அருகே கிடந்த ஏராளமான ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்தீஸ்கர் மாநில காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இதற்கு முன்பு, அப்பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸாருக்கு உதவி செய்வதற்காகவும், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும் பணிக்காகவும், அப்பகுதிக்கு மத்திய துணை ராணுவப் படையின் 2 பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் ஆர்.கே. விஜ்.
ராஜ்நாத் சிங் நிலவரத்தை கேட்டறிந்தார்: மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியது குறித்து, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், "சம்பவ இடத்துக்கு மத்திய துணை ராணுவப் படையின் கூடுதல் பிரிவுகள் விரைந்துள்ளன. மாவோயிஸ்ட் தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு உயிரிழந்த நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன். சண்டையில் காயமடைந்தோர், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என்றார் அவர்.
சோனியா கவலை: சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர், மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த போலீஸார் 7 பேரின் குடும்பத்தினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு இதே பகுதியில், மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 74 பேரை கொன்றனர். 2013ஆம் ஆண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய மற்றொரு தாக்குதலில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட 25 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. இதனால், இந்த தாக்குதல் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top