மகாவீர் போதனைகளை பின்பற்றினால் அன்பு செழித்தோங்கும்



சென்னை - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும் சமண, சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எவரிடமும் விருப்போ, வெறுப்போ கொள்ளாமல், மடமை, அச்சம் ஆகியவற்றை விலக்கி பற்றில்லாது வாழ்பவரே முக்தி பெற்றவர் என்றார் பகவான் மகாவீரர். பற்றே பல்வகையான துன்பங்களுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. ஆணவம், கோபம், வெறுப்பு, ஏமாற்றம், பழித்தல், பழி வாங்குதல் போன்ற பலவும் பற்றாலே மனிதரை பற்றி விடுகின்றன. இப்பற்றே இம்சையின் விதையாகவும், வேராகவும் இருப்பதால், இம்சையை விட்டு அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டுமானால் பற்றை முற்றிலும் விட்டொழிக்க வேண்டும் என போதித்தார் மகாவீரர்.
கொல்லாமையும் பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை விளக்கி, அஹிம்சை நெறியை உலகிற்கு உணர்த்திய பகவான் மகாவீரரின் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும். அறத்தையும், அஹிம்சையையும் இரு கண்களாக பாவித்த பகவான் மகாவீரரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில், அவருடைய போதனைகளை பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மகாவீர் ஜெயந்தி: கவர்னர் ரோசய்யா வாழ்த்து
தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
மகாவீர் ஜெயந்தியை யொட்டி ஜைன மதத்தினர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகான் மகாவீர் பிறந்த தினத்தில் நேர்மையுடனும், இரக்கமுடனும், உண்மையாக வாழ்ந்து, பேராசை மற்றும் விருப்பங்களை கட்டுப்படுத்தி அகிம்சை மேம்பாடு மற்றும் சகிப்புத்தன்மையுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top