மறைக்கப்பட்ட உண்மைகள் இந்தியப் படைகளும் பிரபாகரனும்!

LTTE_Leader_Apo8064

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியது தவறானதொரு முடிவு என்ற கருத்து, இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்தவர்களால் அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் எழுதியிருந்த சுயசரிதையிலும், அது தொடர்பாக இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த பேட்டி ஒன்றிலும் இதுகுறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்தியப் படைகளை அனுப்பும் முடிவை கொழும்பில் வைத்தே ராஜீவ் காந்தி எடுத்தார் என்றும், அதுகுறித்து அமைச்சரவையிடமோ அல்லது வேறு எவரிடமோ கலந்துரையாடவோ அனுமதி பெறவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். நட்வர் சிங் வெளியிட்ட இந்த தகவல்கள் புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அதற்குப் பின்னர், இப்போது இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது வெளிவிவகார இணை அமைச்சராக இருப்பவருமான ஜெனரல் வி.கே.சிங் மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளம்பியிருக்கிறார். இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்ப எடுத்த முடிவை கொள்கை ரீதியான ஒரு தவறு என்றும், அது இராணுவ மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, இரு நாட்டு அரசாங்கங்களும் எடுத்த முடிவு என்றும் அவர் கூறியிருக்கிறார். ராய்ப்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்திருந்த இந்தக் கருத்துகளில் ஒன்றும் புதிய விடயம் உள்ளடங்கியிருக்கவில்லை. அதாவது, இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறத்தக்க நிலையில் இப்போது இந்தியாவில் யாருமில்லை என்றே கூற வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட அதேநிலையில் தான் இருக்கின்றனர். எனவே, ஜெனரல் வி.கே.சிங் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியமானதல்ல. எனினும், அவர் கூறியுள்ள இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, இந்திய அமைதிப்படையினர் பலமுறை அழிக்கும் அளவுக்கு நெருங்கியிருந்தனர் என்றும், ஆனால், அவரை தப்பிச் செல்ல வழி விடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். இரண்டாவது, தாமே பயிற்சி அளித்தவர்களுடன் போரிடுகின்ற சங்கடமான நிலைக்கு உள்ளாகியதாகவும் ஜெனரல் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு விடயங்களும் தற்போதைய தருணத்திலும் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன. அதாவது, இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும் இலக்குடன் செயற்படவில்லை என்ற கருத்து சரியானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால், பிரபாகரனை பலமுறை அழிக்கும் அளவுக்கு நெருங்கிய போதும், அவரைத் தப்பிக்க விடுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக ஜெனரல் வி.கே.சிங் கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும் நோக்குடனேயே, இந்தியப் படையினர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்பதே உண்மை. பிரபாகரன் அழிக்கப்பட்டு விட்டால், புலிகள் உள்ளிட்ட எல்லா இயக்கங்களையும், தனது வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்பது இந்தியா வின் கருத்தாக இருந்தது. தமது உடன்பாட்டை பிரபாகரன் மட்டுமே ஏற்க மறுத்து வந்ததால், அவர் மீது இந்தியாவுக்கு கடுமையான கோபம் இருந்து வந்தது. இதனால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கிய தும், கொக்குவிலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து, இந்திய இராணுவத்தின் பரா கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர். ஆனால், யாழ். மருத்துவ பீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவ பரா கொமாண்டோக்களின் அணி, விடுதலைப் புலிகளால் நாசமாக்கப்பட்டது. அதில் 29 பரா கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியப் படைகள் தமது வரலாற்றில் சந்தித்த மோசமான தோல்விகளில் ஒன்றாக இன்றைக்கும் கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருட னோ, சடலமாகவோ கைப்பற்றுவதற்கு, இந்தியப் படைகள் பெரும் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். வடக்கு மாகாணம் முழுவதிலும், பிரபாகரனைத் தேடி வேட்டைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அவர் மணலாறு காட்டுக்குள் ஒளிந்திருப்பதான தகவல் கிடைத்த போது, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத் துக் கொண்ட, இந்தியப் படையினர், பலமுறை காடுகள் மீது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். பிரபாகரன் மணலாறுக் காட்டுக்குள் தான் மறைந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், அந்தப் பகுதியை இறுக்கமான முற்றுகைக்குள் இந்தியப் படையினர் வைத்திருந்ததும், காடுகளுக்குள், 500 கிலோ எடை கொண்ட குண்டுகளை ஹெலிகொப்டர்களில் இருந்து வீசியதும் மறுக்க முடியாத விடயங்கள். இவையெல்லாம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கிற்கான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர, அவரைத் தப்பிக்க விட வேண்டும் என்ற கோணத்தில் மேற்கொள்ளப்பட்டவையல்ல. ஒரு கட்டத்தில், பிரபாகரன் இறந்து விட்டார் என்று கூட இந்தியா செய்தி வெளியிட்டது. விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் ஒரு உளவியல் உத்தியாகவே அந்த வதந்தியையும் இந்தியா பரப்பியது. எனினும், விடுதலைப் புலிகளின் தலைவரை இந்தியப்படைகளால் எதுவும் செய்ய முடியாமல் போனது. அது இந்தியாவின் தோல்வியாகவே கருதப்படுகிறது. ஜெனரல் வி.கே.சிங், இந்தியப் படைகளின் இலங்கை நடவடிக்கைகளை அரசியல் மட்டத்திலான கொள்கை ரீதியான தோல்வியாக வெளிப்படுத்த முனைகிறாரே தவிர, அதனை இந்திய இராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும்- அல்லது விடுதலைப் புலிகளை அழிக்கும் இலக்கினை நிறைவேற்ற முடியாத நிலையில் தான், இந்தியப்படைகள் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஜெனரல் வி.கே.சிங் அதனை மறைக்கப் பார்க்கிறார். இந்தியப் படைகளால் முடியாத விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும் காரியத்தை, இலங்கைப் படைகள் நிறைவேற்றியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. அதனால் தான், பலமுறை பிரபாகரனை நெருங்கினோம், ஆனாலும் அவரைத் தப்பிக்க வழிவிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தால், அவர் தப்பிச் சென்றார் என்று, தமது தயவில் தான் பிரபாகரன் உயிர்தப்பியது போலவும், கருத்து வெளியிட்டிருக்கிறார். எனினும், பிரபாகரனைத் தப்பிக்க வழி விடுமாறு உத்தரவிட்டிருந்தது யார் என்பதை, ஜெனரல் வி.கே.சிங் வெளிப்படுத்தவில்லை. அதேவேளை, அவரது இந்தக் கருத்தை, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவரான, கேணல் ரமணி ஹரிகரன் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்குத் தெரிந்தவரையில், பிரபாகரனை ஒரு ஒருமுறை தான் இந்தியப் படையினர் நெருங்கியதாகவும், ஆனால் அப்போது அவர் தப்பிச் சென்று விட்டதாகவும், கேணல் ஹரிகரன் குறிப்பிட்டிருக்கிறார். கேணல் ஹரிகரனைப் பொறுத்தவரையில், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுதந்திரமாக இயக்கும் ஒருவராகவே இருக்கிறார். ஆனால் ஜெனரல் வி.கே.சிங் பா.ஜ.கவில் இணைந்து இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அவர், இந்த விவகாரத்தை வைத்து, காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது பழி போடுவதற்கே முயற்சித்திருப்பதாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் மட்டுமன்றி, இன்னொரு விடயத்திலும் அதனை உணர முடிகிறது. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் போய் தாமே பயிற்சி அளித்தவர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜெனரல் வி.கே.சிங் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இப்போதைய நிலையில், தாம் விடுதலைப் புலிகளுக்கோ, அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளுக்கோ ஆயுதங்களை வழங்கியதையோ, பயிற்சி அளித்ததையோ ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. இருந்தாலும், ஒரு வெளிவிவகார இணை அமைச்சராக இருந்து கொண்டே, தாமே பயிற்சி அளித்தவர்களுடன் இந்திய இராணுவத்தினர் மோத வேண்டிய சங்கடமான நிலை இலங்கையில் ஏற்பட்டதாக, கூறியிருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங். இதுவும் கூட காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது பழிபோட்டு விடலாம் என்ற வகையில் தான் கூறப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அதனை அரசியலாக்கும் போக்கு, மட்டும் இன்னமும் மாறவில்லை. இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங். 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top