திருவனந்தபுரம்: புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குளத்தில் இருந்து 5 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ளது புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில். இக்கோயிலில் பல ஆயிரம் கோடி ரூபாய் பொக்கிஷங்கள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், கோயிலில் எப்போதுமே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவிலுள்ள குளத்தில், இன்று மாலை பராமரிப்பு ஊழியர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்தின் உள்ளே சந்தேகப்படும்படியான ஒரு சாக்கு மூட்டை இருந்ததை ஊழியர்கள் கவனித்தனர். அதை திறந்து பார்த்தபோது, உள்ளே ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அந்த சாக்குமூட்டை, ஆளில்லா இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அப்போது ஒரு குண்டில் இருந்து லேசான புகை வெளியேவந்ததாகவும், சிறு சத்தத்துடன் அது வெடித்ததாகவும், நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயர்மட்ட விசாரணைக்கு, மாநில போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கோயில் அருகேயுள்ள சிசிடிவிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. இதனிடையே, பாம்கள் கண்டெடுக்கப்பட்ட குளத்திற்குள்ளே, பொக்கிஷ அறைக்கு செல்வதற்கான ரகசிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உலவுகிறது. பொக்கிஷங்களை கொள்ளையிடும் முயற்சியாக, சமூக விரோதிகள், யாரேனும் வெடிகுண்டுடன் கோயில் அருகே வந்திருக்கலாம், பாதுகாப்பு கெடுபிடி காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் தடங்கலாலோ, வெடிகுண்டுகளை குளத்தில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலை சுற்றிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments :