சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல், கர்நாடக உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்களுடன், நிறுவனங்களின் மதிப்பு, கட்டுமான செலவும் அரசு தரப்பால் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதன் மதிப்பு மட்டும் 27 கோடியே 79 லட்சம் ரூபாய் என்றும், அவற்றுடன் திருமண செலவாக 6 கோடியே 45 லட்சம் ரூபாயும் சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்துக் சேர்த்ததாக கூறிய அரசு தரப்பின் கணக்கு தவறானது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மிகையாக சேர்க்கப்பட்ட திருமண செலவு, நிறுவன மதிப்பு, கட்டுமான செலவுகளை கழித்தால் உண்மையான சொத்து மதிப்பு ரூ. 37 கோடியே 59 லட்சம் ரூபாய் எனவும், மொத்த வருவாய் 34 கோடியே 76 லட்சம் ரூபாய் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருமானத்திற்கும், சொத்துக்கும் இடையேயான வேறுபாடு 2 கோடியே 82 லட்சம் ரூபாய் என்றும், வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12 % என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானத்தை விட 10 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்த்திருந்தால் வழக்கில் இருந்து விடுவிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, வருமான வரித்தொடர்பான வாதத்தை கீழ்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாங்கிய வங்கிக்கடனை கீழ்நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறியுள்ள நீதிபதி குமாரசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதங்கள் கீழ்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
No comments :