
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மகனுக்கு வேலை வாங்கி தருவதாக நடிகர் ஒருவரிடம் ரூ.17 லட்சம் சுருட்டி உள்ளனர்.
போலி டாக்டர் தம்பதி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டாக்டருக்கு படிக்காமல் டாக்டர் வேடத்தில் இவர்கள் மோசடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் இவர் கள் கோடி, கோடியாக பணத்தை சுருட்டி உள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் பெயரை தவறாக பயன்படுத்தியது மட்டும் அல்லாமல், டாக்டர் தொழிலை கூட இவர் கள் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற மருத்துவ படிப்பு பற்றி இவர்கள் இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் டாக்டர் வேடத்தில் கழுத்தில் ஸ்டெதஸ் கோப்புடன் கடந்த 5 ஆண்டுகளாக வலம் வந்துள்ளனர். நோயாளிகளுக்கு ஊசி, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
நடிகரிடம் ரூ.17 லட்சம் மோசடி
நடிகர் ரஜினிகாந்துடன் படிக்காதவன் படத்தில் அவருக்கு தம்பி வேடத்தில் நடித்துள்ளவர் நடிகர் விஜய்பாபு. இவர் மேலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்பாபுவிடமும் போலி டாக்டர் தம்பதி ரூ.17 லட்சத்தை சுருட்டி உள்ளனர். இதுதொடர்பாக விஜய்பாபு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
போலி டாக்டர் தம்பதி நான் வசிக்கும் விருகம்பாக்கம் பகுதியில்தான் வசித்தனர். தினமும் நான் நடை பயிற்சிக்காக நடந்து செல்லும்போது, போலி டாக்டர் ஆனந்தகுமாரும் நடைபயிற்சிக்கு வருவார். அப்போது அவர் தனக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் நன்கு பழக்கம் இருப்பதாக தெரிவிப்பார். செல்போனில் கூட பேசுவார். ஆந்திர மாநில தலைமைச்செயலாளர் தனது நண்பர் என்றார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கதை விட்டார்.
எனது மகன் என்ஜினீயரிங் படித்துவிட்டு கால் சென்டரில் பணிபுரிந்தான். அவனுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் நல்ல வேலை வாங்கித்தருவதாக சொல்லி என்னிடம் ரூ.20 லட்சம் பெற்றார். என் முன்னாடியே செல்போனில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரிடம் பேசினார். ஆனால் அவர் சொன்ன பெயரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரும் ஆந்திராவில் இல்லை என்பதை நான் விசாரித்தபோது தெரியவந்தது.
மோசடி பேர் வழி
அதன்பிறகுதான் ஆனந்தகுமார் ஒரு மோசடி பேர் வழி என்பதை நான் தெரிந்துகொண்டேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி ரூ.17 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இவ்வாறு நடிகர் விஜய்பாபு கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
போலி டாக்டர் தம்பதியான ஆனந்தகுமார், நிர்மலா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரணை நடத்தும்போது இவர்கள் இருவர் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.
No comments :