மாங்காடு அருகே காதலிக்கும்படி இளம்பெண்ணை தொந்தரவு செய்த வாலிபர் கொலை பெண்ணின் தம்பி உள்பட பள்ளி சிறுவர்கள் 4 பேர் கைது.


மாங்காடு அருகே தன்னை காதலிக்கும்படி இளம்பெண்ணை தொந்தரவு செய்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்
. இதில் பெண்ணின் தம்பி உள்பட பள்ளி மாணவர்களான 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டர் கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் குருநாதன்(வயது 19) என்பவர் சென்னை கே.கே. நகரை அடுத்த நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 3 நாட்களாக குருநாதன் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது தாய், எனது மகனை காணவில்லை, இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று அவரது நண்பர்களிடம் கூறினார்.
இதையடுத்து நெசப்பாக்கத்தை சேர்ந்த ராம்(17), சுந்தர்(17), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற 10ம் வகுப்பு மாணவர்கள் நேற்று மதியம் எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அவர்கள் இருவரும் இன்ஸ்பெக்டர் சித்தார்த்த சங்கர்ராயிடம் சென்று நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து 3 நாட்களுக்கு முன்பு குருநாதன் என்பவரை கொலை செய்துவிட்டோம். அவரது உடலை மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், செங்கல் சூளை அருகே உள்ள முட்புதரில் வீசிவிட்டு வந்து விட்டோம் என்று கூறினர். இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்தார்.
அக்காவிடம் தொந்தரவு
உடனே இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, இரண்டு பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தார். மாங்காடு போலீசார் அந்த இரண்டு பேருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை நடந்த இடத்தை இருவரும் அடையாளம் காண்பித்தனர். அங்கு அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட குருநாதன், ராமுவின் குடும்பத்திற்கு தூரத்து உறவினர். ராமுவின் அக்காவிடம் தன்னை காதலிக்கும்படி குருநாதன் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கத்தியால் குத்தி கொலை
ஆனால் ராமுவின் அக்காவும், குருநாதனும் அக்கா, தம்பி முறை வருவதால் காதலிக்கக் கூடாது என்று ராமு அவரை எச்சரித்து வந்தார். இருப்பினும் குருநாதன் மீண்டும் அதே வேலையில் இறங்கினார். 3 நாட்களுக்கு முன்பு ராமுவின் வீட்டிற்கு சென்ற குருநாதன் அங்கிருந்த ராமுவின் அக்காவிடம் ஒரு செல்போனை கொடுத்து அதனை சார்ஜர் போட்டு ராமுவிடம் கொடுக்கும்படி கூறினார்.
வெள்ளிக்கிழமை மாலையில் ராமுவுக்கு போன் செய்து எங்கு இருக்கிறாய் என்று குருநாதன் கேட்டார். அதற்கு ராமு தனது நண்பர்களுடன் கொளப்பாக்கம் பகுதியில் குளித்துக் கொண்டிருப்பதாக கூறியதையடுத்து அங்கு குருநாதன் சென்றார். அப்போது குருநாதன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமுவை குத்த முயன்றார். சுதாரித்துக் கொண்ட ராமு தனது நண்பர்களுடன் சேர்ந்து தடுத்து, அதே கத்தியால் குத்தி குருநாதனை கொலை செய்ததும் தெரியவந்தது.
4 சிறுவர்கள் கைது
கொலை நடந்த இடம் முட்புதர்கள் நிறைந்த பகுதி என்பதால் அங்கு வேகமாக ஓடவோ, நடக்கவோ முடியாது. எனவே வேறு எங்காவது கொலை செய்துவிட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராமு, சுந்தர் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த 9–ம் வகுப்பு மாணவர் அருண்(16), 11–ம் வகுப்பு மாணவர் செல்வம்(18) (இவர்களது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top