
இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.
சர்வதேச அளவில் 2-வது இடத்தில் இருக்கும் சாய்னாவுக்கு இப்போது சீனாவின் லீ ஜூவேரியை முந்திச் சென்று சர்வதேச பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டெல்லியில் நடந்து வரும் ‘சன்ரைஸ்’ இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று சாய்னா சிறப்பாக விளையாடி முதல்முறையாக இந்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இதில் வெற்றி பெற்றால் உலக அளவில் தற்போது 2-வது இடத்திலிருக்கும் சாய்னா முதலிடத்தை பிடிக்க முடியும்.
ஜனவரி மாதம் வரையிலான புள்ளிவிபரப்படி, ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஜூவேரி தற்போது முதலிடத்தில் இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அடுத்த வாரம் டாப் ரேங்கிங் பட்டியலில் தனது முதலிடத்தை லீ இழப்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த நம்பர்-ஒன் யார் என்ற பரபரப்பில் பேட்மிண்டன் உலகமே மூழ்கியுள்ளது. அரையிறுதியில் கரோலினா வெற்றி பெறாமல் இருக்கும் பட்சத்தில் இந்த நம்பர்-1 வாய்ப்புக்கு எந்த பங்கமும் இல்லை.
அரையிறுதியில் ஜப்பானின் யூய் ஹஷிமோட்டோவுடன் மோதும் சாய்னா இதுபற்றி கூறியவை பின்வருமாறு:-
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களை வெல்ல வேண்டும் என்று எல்லோருக்குமே கனவு இருக்கும். அதில் நானும் ஒருவராக இருக்கிறேன். ஆனால், நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வேண்டும். என்னுடைய விளையாட்டை ரசிக்க வேண்டும். நம்பர்-1 ஆக வருவது நல்ல விஷயம்தான். அதுதான் எனது விதி என்று இருந்தால் நிச்சயம் நடக்கும். நம்பர்-1 ஆக இருப்பதை மட்டுமே நான் விரும்பவில்லை. தற்போது டாப்-5 இடங்களுக்குள் தொடர்ந்து இருப்பதே எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்கவே விரும்புகிறேன். தொடர்ந்து ரேங்கிங்கில் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை விட தொடர்ந்து நிலையாக ஓரிடத்தில் இருப்பதே முக்கியம். லீ ஜூவேரி காயமடைந்துள்ளார். அவர் உலகின் மிகச்சிறந்த பிளேயர் என்பதை நீங்கள் மறுத்துவிட முடியாது. ஆனால், கடந்த சில மாதங்களாக அவர் காயத்தால் தவித்து வருகிறார். காயத்திலிருந்து மீண்டு வந்தவுடன் மறுபடியும் அவர் நிச்சயம் முதலிடத்தை பிடிப்பார்.
No comments :