
நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி இந்தியா வெளியேறியது. ஆஸ்திரேலியா நிர்ணயம் செய்த இமாலய இலக்கை, நோக்கி இந்திய அணி விளையாடியபோது, துணை கேப்டன் விராட் கோலி பொறுப்பே இல்லாமல் விளையாடி விட்டார். மிட்செல் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து பேட்டின் மேல் முனையில் பட்டு உயரே எழும்பியது. அதை விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஓடிச் சென்று கேட்ச் செய்தார். 13 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து கோலி வெளியேற, சில ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். கேலரியில் அமர்ந்திருந்த கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் போராட்டமின்றி சாதாரணமாக சரண் அடைந்து விட்டது தான் நமது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த உடன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுக்க தொடங்கிவிட்டனர். அவர்களுடைய உருவ பொம்பையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. அனுஷ்கா மீது ரசிகர்கள் பாய்ந்தது, பாலிவுட் நடத்திரங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் அனுஷ்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் விராட் கோலி - அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள் என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துஉள்ள இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், “எங்களுடைய வெற்றி மற்றும் தோல்வியின் போது ஆதரவு தெரிவிக்கும் உண்மையான இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு! விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள்,” என்று கேட்டுக் கொண்டு உள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் 5 சதங்கள் எடுத்த விராட் கோலி அவரது ரசிகர்களால் ஆதரவு மற்றும் மதிப்பு அளிக்கப்படுவதற்கு தகுதி உடையவரே. இனி வரும் நாட்களில் விராட் கோலி நிச்சயம் நாட்டுக்காக சிறப்பாக தொடர்ந்து விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றும் யுவராஜ் சிங் குறிப்பிட்டு உள்ளார்.
No comments :