பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜனதா தலைவர் அத்வானி உள்ளிட்ட 20 தலைவர்கள் பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

பாபர் மசூதி இடிப்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6–ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அன்று அயோத்தியில் இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் 20 தலைவர்கள் மீது ஒரு வழக்கும், கரசேவையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத லட்சக்கணக்கானவர்கள் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. இவர்கள் மீது பல்வேறு கிரிமினல் பிரிவுகளில் குற்றப் பத்திரிகையையும் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
கிரிமினல் வழக்குகள் ரத்து
வழக்கை விசாரித்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்தது.
இதன் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டும் பா.ஜனதா தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கான சதிச்செயலில் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பு கூறியது. எனினும் மற்ற பிரிவுகள் மீது வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
மேல் முறையீடு
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2010–ம் ஆண்டு மே மாதம் 10–ந்தேதி சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. எனினும், அதன்பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் எதையும் சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான ஹாஜி மகபூப் அகமது சுப்ரீம் கோர்ட்டில் தனியாக ஒரு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தார்.
அதில், ‘மத்தியில் ஆட்சி மாறிய பின்பு, சி.பி.ஐ. தனது நிலைப்பாடு நீர்த்துபோகும் விதத்தில் நடந்தகொள்கிறது’ என்று கூறியிருந்தார்.
அத்வானிக்கு நோட்டீசு
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மேல் முறையீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் வழக்கின் தன்மை தொடர்பாக புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ. கால அவகாசம் கோரியது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர். இதேபோல் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்பட 20 பேரும் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கத்யார், முரளி மனோகர் ஜோஷி மற்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே உள்ளிட்ட 21 பேர் மீது சி.பி.ஐ. கிரிமினல் வழக்கு பதிவு செய்திருந்தது. பால் தாக்கரேயின் மறைவுக்கு பின்பு அவருடைய பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top