
சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பெரிய அளவில் எச்சரிக்கை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவை எடுத்தது.
அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40 சதவீத அளவிற்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85 சதவீதத்துக்கு பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு இன்று(ஏப்ரல் 1–ந்தேதி) முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
நிலைக்குழு ஆய்வு
இந்த நிலையில் 2003–ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை பா.ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து வந்தது.
இந்த குழு தனது சிபாரிசை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அண்மையில் தாக்கல் செய்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நத்தாவுக்கு எழுதிய கடித்தத்தில் திலீப்காந்தி கூறியிருப்பதாவது:–
உறுதிப்படுத்தப்படவில்லை
இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன. புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை.
இது தொடர்பாக மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், மராட்டியம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் 4 கோடி பேரிடம் விரிவான ஆய்வு நடத்தவேண்டி உள்ளது.
நிறுத்தி வைக்கவேண்டும்
மேலும் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இத்தொழிலின் வருவாய் ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டி இருக்கிறது.
எனவே எச்சரிக்கை செய்யும் படங்களை பெரிய அளவில் சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளில் அச்சிடவேண்டும் என்கிற முடிவை சுகாதார அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு இருந்தது.
சிபாரிசு ஏற்பு
பாராளுமன்ற நிலைக்குழுவின் இந்த சிபாரிசை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதார அமைச்சகம், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பாக்கெட்டில் பெரிய அளவில் படங்களை அச்சிடவேண்டும் என இன்று(ஏப்ரல் 1–ந்தேதி) முதல் அமல்படுத்த இருந்த முடிவை தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளது.
எனினும், திலீப்காந்தி எம்.பி.யின் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்பட பல எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
No comments :