தகவல் பரிமாற்றத்திற்கான பரமார்த்த வழியாக வலம் வந்துகொண்டிருக்கும் ‘வாட்ஸ்–அப்’ இன்று பலரின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரித்தும், வெளிச்சம் போட்டு காட்டும் மந்திரக்கோலாக மாறிவிட்டது.

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு வசனம் பேசும் வாலிபர்...., ‘ஆம்பள பசங்க பாவம்’ என உருகும் அம்மா..., ‘உன்ன எனக்கு பிடிக்கல... அது ஏன்னும் தெரியல’ என தழுதழுக்கும் குரலில் கல்லூரி மாணவி... என சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் நீள்கிறது அந்த உரையாடல். கூடுதல் இணைப்பாக கல்லூரி மாணவியும், வாலிபரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வேறு... இது போதாதா நம் ‘செல்லர்களுக்கு’, குரூப் குரூப்பாக தேடி தேடி இந்த உரையாடல் மற்றும் படங்களை பதிவேற்றுகிறார்கள். தற்போது திருச்சியில் ‘ஹாட் டாக்’ இந்த உரையாடல் தான்.
திருச்சி கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவியும், வாலிபரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். திடீரென அந்த வாலிபரை கல்லூரி மாணவிக்கு பிடிக்காமல் போய்விட்டது. வெறோரு வாலிபரை அவர் காதலிக்கிறார். தனது பழைய காதலை புதிய காதலரிடம் மறைக்காமல் சொல்லி இருக்கிறார் அந்த கல்லூரி மாணவி. இதற்கிடையில் மாணவி தன்னிடம் பேசமால் இருப்பதன் காரணத்தை கண்டுபிடித்து விடுகிறார் முதல் காதலர்.
மாணவி தன்னுடன் எடுத்துக்கொண்ட படங்களை எடுத்துக்கொண்டு, புதிய காதலர் வீட்டிற்கு அதிரடியாக செல்கிறார் பழைய காதலர். அங்கு புதிய காதலரின் அம்மாவிடம் அனைத்தையும் காட்டுகிறார். இதற்கு பிறகு மாணவிக்கு அங்கிருந்தே போன் செய்து ‘‘உன் வீட்டிற்கு வரப்போகிறேன்... உன் அப்பாவிடம் இதையெல்லாம் காட்டப்போகிறேன்... உன் அப்பா தூக்கில் தொங்கட்டும்...’’ என ஆவேசமாக பேசுகிறார். ‘‘தயவு செய்து வீட்டிற்கு மட்டும் வந்து விடாதே’’ என கெஞ்சுகிறார் மாணவி. பின்னர் அந்த மாணவியின் தோழியும் வாலிபரிடம் சமாதானம் பேசுகிறார்.
இடையில் புதிய காதலரும் ‘‘என்னை ஏன் ஏமாற்றினாய்?’’ என மாணவியிடம் கேட்கிறார். இதன் பிறகு புதிய காதலரின் அம்மா அந்த மாணவியிடம் பேசுகிறார். உரையாடலின் ‘ஹை லைட்’ அது தான். ‘‘இரண்டு பேரையும் விட்டு விட்டு படிக்கிற வேலையை பாரும்மா.. உனக்கு வேற ஒரு ‘நல்ல பையனா’ நானே பார்க்கிறேன்..’’ என கூறி நீண்ட அறிவுரை வழங்குகிறார். இதன் பிறகு முதல் காதலர் ‘‘இப்போ பேசுறத எல்லாம் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்... இதையும் நீ என்னோட எடுத்த போட்டோவையும் நம்ம காலேஜ் குருப்புல போட போறேன்...’’ என மிரட்டுகிறார். அந்த வாலிபர் மிரட்டியதுடன் நிற்காமல் வாட்ஸ் அப்பில் உரையாடலையும், படங்களையும் பதிவேற்றியுள்ளார். தற்போது இவை படுவேகமாக பரவி வருகிறது. தற்போது வெளியாகி உள்ள உரையாடல் மற்றும் படங்களினால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி செய்ததாகவும் தகவல் பரவுகிறது. இதனால் திருச்சி கல்லூரி மாணவிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், கூலி வேலை செய்வோர் என அனைத்து தரப்பினர் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் கேமரா, வாய்ஸ் ரெக்கார்டிங் என பல வசதிகள் உள்ளன. படங்கள், உரையாடல்களை உடனே அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்-அப் உள்ளது. வாட்ஸ்–அப்பில் பல குரூப்கள் உள்ளன. குரூப்பில் உள்ள ஒருவருக்கு கிடைக்கும் தகவல் உடனே அனைவருக்கும் வைரஸ் போல் பரவி விடுகிறது.
படிக்கிற காலத்தில் காதலில் விழும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது இந்த சம்பவம். எதையும் யோசிக்காமல் ஜோடியாக சுற்றுவது, ‘செல்பி’ எடுப்பது என விளையாட்டாக நடப்பது வாழ்க்கைக்கே உலை வைப்பதாக மாறி விடுகிறது. தங்கள் எதிர்காலமே பிள்ளைகள் தான் என நம்பிக்கையில் வாழும் பெற்றோர்கள் இப்படிப்பட்ட உரையாடல்கள், படங்களில் தங்கள் பிள்ளைகள் இருப்பதை கண்டால் அவர்கள் எவ்வளவு வேதனைபடுவார்கள் என்பதை ஒவ்வொரு கல்லூரி மாணவ, மாணவிகளும் சிந்திக்க வேண்டும்.
அதே நேரத்தில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும். காதல் என்னும் போர்வையில் நடக்கும் கூத்துக்கள் தற்போது ‘வாட்ஸ்–அப்’ மூலம் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. இதை உணர்ந்து நடந்து கொள்ளாவிட்டால் ஏற்படும் அசிங்கத்தையும், அவமானத்தையும் யாரும் தாங்க இயலாது.
No comments :