
திருச்சியில் சுங்க அலுவலகத்தில் தங்கம் மாயமானது குறித்து விளக்கம் அளிக்க சுங்கத் துறை மண்டல ஆணையர் டெல்லி செல்ல உள்ளார்.
இந்த விவகாரத்தில் 2-ம் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி சுங்கம் மற்றும் கலால் துறை மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, 14 அரை கிலோ தங்கம் கடந்த மாதம் மாயமானது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மேலும் பல கிலோ தங்கம் மாயமாகி இருப்பதும், பெட்டகத்தில் போலி தங்கம் வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றி மாறுதலாகிச் சென்றவர்கள், ஓய்வு பெற்றவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து, மண்டல சுங்கத் துறை ஆணையர் கே.சி. ஜானி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தங்கம் மாயமான விவகாரத்தில் பணியில் இருந்த ஆய்வாளர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முகமது பாரூக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
No comments :